முன்னாள் நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா, மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் சில நாள்களுக்கு முன்பு, நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பொது விவாதத்துக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதினர். மேலும் அந்தக் கடிதத்தில், பொது விவாதத்தில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தங்கள் அறிக்கைகள் மற்றும் சமூக நீதியின் அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட திட்டம் குறித்த தங்கள் நிலைப்பாடு பற்றி விவாதிக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அடுத்தநாளே இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, `இது போன்ற விவாதம் நம்முடைய பார்வையைப் புரிந்துகொள்வதற்கும், யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைக்கவும் மக்களுக்கு உதவும். அந்தந்த கட்சிகள் மீது கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் முக்கியமானது’ என்று விவாதத்துக்கு ஒப்புக்கொண்டார்.
இருப்பினும் பா.ஜ.க இளைஞரணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, `முதலில் காங்கிரஸ் தங்களின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கட்டும். அவர் தனது கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்பார் என்று கூறிவிட்டு, பின்னர் பிரதமரை விவாதத்துக்கு அழைக்கவும். அதுவரை விவாதத்தில் கலந்து கொள்ள எங்கள் செய்தித் தொடர்பாளர்களை நியமிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தியுடனான விவாதத்துக்கு அவர் போட்டியிடும் ரேபரேலி தொகுதியைச் சேர்ந்த பட்டியலின் தலைவரும், பா.ஜ.க இளைஞரணியின் தேசிய துணைத் தலைவருமான அபினவ் பிரகாஷ் என்பவரை பா.ஜ.க அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து, தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அபினவ் பிரகாஷ், நீங்கள் (ராகுல் காந்தி) போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் 30 சதவிகிதம் இருக்கும் `பாசி’ எனும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவர் எங்கள் இளைஞரணியைச் சேர்ந்தவராக மட்டுமல்லாமல் எங்கள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார்.
மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான இவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரியில் பொருளாதார உதவிப் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். ராகுல் ஜி உங்களின் ஏற்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்… சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலமாக இந்தியாவை ஆண்ட அரசியல் வம்சத்தின் வாரிசுக்கும், பிரதமர் மோடியின் புதிய இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சாமானியருக்கும் இடையேயான வரலாற்று விவாதமாக இது இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb