ஹர்திக் பாண்டியாவை நிராகரித்த ரோஹித் சர்மா! நிர்பந்தத்தால் அணியில் சேர்ப்பு!

இந்திய அணி கடைசியாக ஐசிசி உலக கோப்பையை வென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கடைசியாக இந்திய அணி 2007ல் டி20 உலக கோப்பையை வென்றது.  கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையை பைனலில் கைவிட்டது. இந்நிலையில், அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல சில கடுமையான முயற்சிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. அதன்படி, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை சமீபத்தில் அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்ததற்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் எதிர்ப்பு தெரிவித்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் அனுபவம் மிக்க ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஹர்திக் பாண்டியா 2022-23ம் ஆண்டுகளில் பல டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வந்தார். மேலும் அவரது கேப்டன்சியில் இந்திய அணி பல வெற்றிகளையும் பெற்றது. ஹர்திக் தனது இடத்தை அணியில் தக்கவைத்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியை உலக கோப்பையில் வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டது.

காரணம் 2023ல் ரோஹித் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடவில்லை. உலக கோப்பைக்குப் முன்பே ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் என்று தெரிவித்தார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை அணி நிர்வாகம் நீக்கி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இதன் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளதாவும் செய்திகள் வெளியானது. 

ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2022 மற்றும் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அவரது தலைமையில் ஜிடி ஒருமுறை கோப்பையும், ஒருமுறை பைனலும் சென்றது. ஆனால், ஹர்திக் தலைமையிலான மும்பை அணி ஐபிஎல் 2024ல் முதல் அணியாக பிளேஆப் வாய்ப்பை விட்டு வெளியேறியது. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு 13 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று 9வது இடத்தில் உள்ளது. ஆனாலும், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. 

ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து விலகினால் ஹர்திக் அடுத்த ஒருநாள் போட்டி கேப்டனாகவும் நியமிக்கப்படலாம். 16 டி20 போட்டிகளில் 10 வெற்றிகளை பெற்றுள்ளார் ஹர்திக் பாண்டியா. மேலும் அவரது தலைமையில் 3 ஒருநாள் போட்டிகளில் 2ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஹர்திக் இல்லாதபோது டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் இருந்தார். சூர்யகுமார் கேப்டனாக 7 டி20 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.