16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மதுரை, கோவை, டெல்டா உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று (மே 21) இடி, மின்னல் மற்றும் 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும், 23-ம்தேதி ஒருசில இடங்களிலும், 24 முதல் 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மேகமூட்டம்: இன்று தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 23-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 24-ம் தேதி நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கமுதியில் 12 செ.மீ., தல்லாகுளத்தில் 11 செ.மீ., புள்ளம்பாடியில் 10 செ.மீ., திருமயம், சுத்தமல்லி அணையில் 8 செ.மீ., வெட்டிக்காடு, பூதலூர், காரைக்குடி, குமாரபாளையம், தாளவாடி, கரியகோவில் அணை, வேடசந்தூர், நந்தியாறு ஆகிய இடங்களில் 7 செ.மீ., வல்லம், பட்டுக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதுவடகிழக்கு திசையில் நகர்ந்து,மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 24-ம் தேதி வாக்கில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக, தமிழக, கர்நாடக கடலோரம், லட்சத்தீவு – மாலத்தீவு, மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் இன்று முதல் 24-ம் தேதி வரை அதிகபட்சம் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு கேரள கடலோரம், தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சம் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.