கள்ளக்காதலியுடன் போலீஸ்காரர் தற்கொலை

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி நவநகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 42). இவர் தார்வார் வித்யாகிரி போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண், கணவர் மற்றும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு மகேசுடன் வந்துவிட்டார். மகேசும், விஜயலட்சுமியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவர்களின் வீடு பூட்டியே கிடந்தது. இதனால் வெளியூர் சென்றிருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் கருதினர். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப்பகுதி மக்கள், நவநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது வீட்டுக்குள் மகேசும், விஜயலட்சுமியும் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கள்ளக்காதலியுடன் போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.