`தமிழர்களிடம் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால்..!' – எச்சரிக்கும் சீமான்

பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஒடிசாவில் பூரி ஜெகந்நாத் கோயிலில் வழிபட்டுவிட்டு பின்னர் பிரசாரத்தில் பேசுகையில், ஆறு ஆண்டுகளுக்கு முன் தொலைந்த கோயில் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டிலிருப்பதாகவும், நவீன் பட்நாயக் அரசு அதை மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அடுத்தநாளே, தமிழர்கள்மீது திருட்டுப்பழி சுமத்துவதா என்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என கண்டனம் செய்தார்.

ஸ்டாலின் – மோடி

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், `தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிப்பதா? தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடி தனது உண்மை முகத்தைக் காட்டுகிறாரா?’ என்றும் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், `ஒடிசாவில் தேர்தல் பரப்புரை செய்த பிரதமர் மோடி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுடைய கருவூலத் திறவுகோல் தமிழ்நாட்டிலிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி, தனது அரசியல் லாபத்துக்காகப் பன்னிரண்டு கோடி தமிழ்த்தேசிய இன மக்களையும், அவர்களது வரலாற்றுத்தாயகமான தமிழ்நாட்டையும் கொச்சைப்படுத்திப் பேசியிருக்கும் இச்செயல் கடும் கண்டனத்துக்குரியது. போகிற போக்கில் திருட்டுப்பழியைச் சுமத்த நினைக்கும் மோடியின் பேச்சு அற்பத்தனமானதாகும்.

சீமான்

தமிழ்நாட்டுக்குப் பரப்புரைக்கு வருகிறபோதெல்லாம் தமிழ் மொழியையும், தமிழர்களையும் புகழ்ந்து பேசிய மோடி, ஒடிசாவில் தமிழர்களை இழிவாகக் காட்ட நினைக்கிறாரென்றால், எவ்வாறு இதனைச் சகித்துக் கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதெனும் துணிவில், தனது உண்மை முகத்தை வெளிக்காட்டத் தொடங்குகிறாரா? இவ்வளவு நாள்களாக இஸ்லாமிய மதவெறுப்பை உமிழ்ந்துப் பரப்புரை செய்தவர், இப்போது அதோடு சேர்த்து தமிழர் இன வெறுப்பையும் காட்டியிருப்பது மிகவும் கீழ்த்தரமானதாகும்.

மோடி

ஆகவே, தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிக்கும் விதமாகப் பேசிய மோடி, தனது பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, ஒட்டுமொத்த தமிழர்களிடம் வெளிப்படையான மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இதற்கான எதிர்விளைவுகளை வருங்காலத்தில் பா.ஜ.க-வானது தமிழ்நாட்டில் எதிர்கொள்ள நேரிடுமென எச்சரிக்கிறேன்” என்று சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.