எஸ்ஆர்ஹெச் டேஞ்சர் தான்… ஆனால் சேப்பாக்கம் கேகேஆர் அணிக்கு தான் சாதகம் – அது ஏன் தெரியுமா?

IPL 2024 Final Match: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அதன் கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. இந்த ஐபிஎல் சீசனுக்கு அமர்களமான தொடக்கம் கிடைத்தது எனலாம். தொடர்ந்து ஹைதராபாத், கொல்கத்தாவின் அதிரடி, சிஎஸ்கேவின் தடுமாற்றம் என உச்சகட்டத்தை எட்டிய நிலையில், டெல்லி, ஆர்சிபி அணிகளின் எழுச்சி ஒரு நல்ல ப்ரீ-கிளைமேக்ஸாக அமைந்தது. இருப்பினும் கிளைமேக்ஸ் சீன் வரை நெருங்கிய பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இயலவில்லை. 

இந்த சீசனின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை (மே 26) இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் நீண்ட நாள்களுக்கு பின் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளன. கேகேஆர் அணி 2014ஆம் ஆண்டுக்கு பின்னரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016ஆம் ஆண்டிலும் கோப்பையை கைப்பற்றியிருந்தன. இதுவரை கேகேஆர் 2 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன. 

2012 சம்பவம்

இந்த சீசனின் இறுதிப்போட்டி சென்னையில் நடப்பது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை விட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே அதிக சாதகம் எனலாம். சென்னை ஆடுகளுமும், சூழலும் கேகேஆர் அணிக்கு சாதகமாக அமைய  சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒரு காரணம் என்றாலும் கௌதம் கம்பீர் ஒரு முக்கிய காரணம் எனலாம். ஏனென்றால், 2012ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹாட்ரிக் சாம்பியன்ஷிப் வாய்ப்பை கொடுத்து, கேகேஆர் முதல்முறையாக பட்டம் வென்றது கௌதம் கம்பீர் கேப்டன்ஸியில்தான், அதன் இறுதிப்போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது. 

 லட்சுமிபதி பாலாஜி கொடுத்த ஐடியா 

பிரண்டன் மெக்கலத்திற்கு பதில் பிரட் லீயை எடுத்து வந்தது, லட்சுமிபதி பாலாஜிக்கு பதில் மன்விந்தர் பிஸ்லாவை எடுத்து வந்தது என சிஎஸ்கே அணிக்கு கேகேஆர் செய்த சம்பவத்தை ரசிகர்கள் யாருமே மறக்க மாட்டார்கள். அந்த போட்டியில் பிஸ்லா அந்தளவிற்கு விளையாடுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. சிஎஸ்கே அமைத்த இமலாய இலக்கையும் அசால்ட்டாக அடித்து பிஸ்லா கோப்பையை வென்று கொடுத்தார். பிஸ்லா வருவதற்கு முக்கிய காரணம் லட்சுமிபதி பாலாஜி எனலாம். அவருக்கு காயம் ஏற்படவே தனக்கு பதில் பிரட் லீ அணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என கம்பீருக்கு பாலாஜியே ஐடியா கொடுத்துள்ளார், இதனை சமீபத்தில் அஸ்வின் யூ-ட்யூப் பக்கத்தில் நடைபெற்ற நேரலை வீடியோவில் பாலாஜி பகிர்ந்துகொண்டார். 

அதைவிட, பந்துவீச்சுக்கு பிரட் லீயை எடுத்துக்கொண்டால் பிரண்டன் மெக்கலத்தை வெளியே வைத்துவிட்டு பிஸ்லாவை விளையாட வையுங்கள் என கம்பீருக்கு அறிவுறுத்தியதும் பாலாஜிதானாம். 
எனவேதான், கம்பீர் கோப்பையை வென்ற பின்னர் இதனை பாலாஜிக்கும் சமர்பிக்கிறேன் என்றாராம். கம்பீர் அப்போது இருந்து தற்போது வரை சேப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு மைதானங்களை நன்கு அறிந்து வைத்திருப்பார். இந்த சீசனில் சிஎஸ்கேவிடம் தோற்றாலும் அதில் பனியும் ஒரு முக்கிய பங்காற்றியது. எனவே, நாளைய போட்டியில் பனி இருக்குமா இருக்காதா என்பது மழை வருமா வராதா என்பதை பொறுத்துதான் அமையும் என்கின்றனர் வல்லுநர்கள். 

மற்றொரு சாதகம்…

கம்பீர், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோரை போல் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணும் நாளைய போட்டியி கேகேஆர் வெற்றி பெற முக்கிய பங்காற்றுவார் எனலாம். ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா ஆகியோரை வளர்த்துவிட்ட பங்கு அவருக்கும் உண்டு. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான அவருக்கு நாளைய ஆடுகளத்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்பதும் நன்கு பரிட்சயமாகியிருக்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளர் கூட தமிழராக இருக்கலாம்… ஆனால் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கேகேஆர் அணிக்கு உள்ளூர் சாதகம் அதிகம் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.