`முதலில் பெரியப்பா மகன்… அடுத்து அவனின் நண்பன்' – 11 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!

வடசென்னையைச் சேர்ந்தவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் பெயின்ட்டராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி செல்வி (பெயர் மாற்றம்) . இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகளுக்கு 11 வயதாகுகிறது. இவர், 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்புக்கு செல்ல உள்ளார். இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதுகுறித்து அவரின் பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதையடுத்து சிறுமி, தன்னுடைய சித்தியிடம் விவரத்தைக் கூறியதோடு இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்திருக்கிறார்.

பாலியல் தொல்லை

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் சித்தி, உடனடியாக தன்னுடைய அம்மாவிடம் விவரத்தைக் கூறி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார். அதன்படி சிறுமியின் பாட்டி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்கள். அப்போது சிறுமி, தன்னுடைய பெரியப்பா மகன், தனக்கு திண்பண்டங்களை வாங்கிக் கொடுத்து தன்னிடம் தவறாக நடந்துக் கொண்ட விவரத்தைக் கூறினார். சிறுமி கூறியதை அவரின் பாட்டியிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அதனால் சிறுமியின் பாட்டி, தன்னுடைய பேத்திக்கு நடந்த கொடுமை குறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், “சிறுமியின் அப்பாவும் அம்மாவும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என்று தெரிகிறது. அதனால் அவர்கள் தங்களின் குழந்தைகள் மீது பெரியளவில் அக்கறை செலுத்துவதில்லை. இந்தச் சூழலில்தான் சிறுமியின் பெரியப்பா மகனான 16 வயது சிறுவன், அவருடன் சகஜமாக பேசி பழகி வந்திருக்கிறார். அண்ணன், தங்கை முறை என்பதால் குடும்பத்தினருக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை. இந்தச் சமயத்தில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அவரின் பெரியப்பா மகனான 16 வயது சிறுவன் வந்து அவருடன் பேசியுள்ளார். பின்னர் தங்கை முறை என்று கூட கருதாமல் சிறுமியை அந்தச் சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். பின்னர் அதை யாரிடமும் சொல்லக் கூடாது என சிறுமியை அந்தச் சிறுவன் மிரட்டியிருக்கிறான். அதனால் சிறுமியும் எந்தத் தகவலையும் தன்னுடைய பெற்றோரிடம் சொல்லவில்லை. அதனால் சிறுமியை மிரட்டியே அந்தச் சிறுவன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறான்.

கைது

இந்தநிலையில்தான் சிறுமியை பெரியப்பா மகனான சிறுவன், பாலியல் வன்கொடுமை செய்யும் தகவல் அவனின் நண்பன் ஒருவனுக்கு தெரியவந்திருக்கிறது. அவனும் சிறுமியை மிரட்டி தவறாக நடந்துள்ளான். அதனால் சிறுமி உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை அவரின் அண்ணனும் அண்ணனின் நண்பனும் பாலியல் வன்கொடுமை செய்த தகவல் அந்தப்பகுதியில் வசிக்கும் டெய்லர் ஒருவருக்கு தெரியவந்திருக்கிறது. அவரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படி மூன்று பேரிடம் சிக்கிய சிறுமி, சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்து வந்திருக்கிறார். அதை தன்னுடைய குடும்பத்தினரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்திருக்கிறார். இந்தச் சூழலில்தான் சிறுமியை மீண்டும் அவரின் அண்ணன் முறையான பெரியப்பா மகனான சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதில் சிறுமிக்கு வயிற்று வலி மற்றும் அவரின் பிறப்புறுப்பில் கடும் வலியும் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகே சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லியுள்ளார். இந்த வழக்கில சிறுமியின் பெரியப்பா மகனான 16 வயது சிறுவன், அவனின் நண்பனான இன்னொரு 16 வயது சிறுவன், டெய்லர் ஆகிய மூன்று பேரை கைது செய்திருக்கிறோம் . சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் கவுன்சலிங் அளித்துள்ளோம். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு அயனாவரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 18 பேர் சிக்கினர். அந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட சென்னை போலீஸார், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தனர். அதைப்போல இந்தச் சிறுமி வழக்கிலும் வில்லிவாக்கம் போலீஸார் துரிதமாக செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.