ஆக.3, 4-ல் அரசு கணினி சான்றிதழ் தேர்வு: தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகிய வணிகவியல் தொழில்நுட்பத்தேர்வுகளை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்துகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் பருவ அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவரும், தொழில்நுட்பக் கல்வி ஆணையருமான கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் பருவ அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான அறிவிக்கை ஜுன் மாதம் 2-ம் தேதி வெளியிடப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜுன் 5-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடையும். கருத்தியல் தேர்வு (தியரி) ஆகஸ்ட் 3-ம் தேதியும், செய்முறைத்தேர்வு 4-ம் தேதியும் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்படும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தலைமைச் செயலக நிருபர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பதவிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி இல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தாலும் தகுதிகாண் பருவத்துக்குள் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் பணிவரன்முறை செய்யப்படும்.

ஒருவேளை கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான பாடங்களில் பட்டம் பெற்றிருப்போருக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) தேர்வு மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கே அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகளாக இருந்தால் மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு உண்டு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.