ஹரியாணா: ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கொலை குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்தது பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம்.
முன்னதாக, 2021ம் ஆண்டில், இந்த கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் உட்பட 5 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் குர்மீத் ராம் ரஹீம் வழக்கு தொடர்ந்தார். இதில் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக குர்மீத் ராம் ரஹீமின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்கின் பின்னணி: ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் ஏற்கெனவே ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா சவுதா அமைப்பில் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெண் சீடர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மேலாளர் ரஞ்சித் சிங் வெளியில் பரப்பியதாக குர்மீத் ராம் ரஹீம் சந்தேகித்துள்ளார். அதனால், ரஞ்சித் சிங்கை கொலை செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியது. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் மற்றும் அவரது கூட்டாளிகள் கிருஷ்னண் லால், ஜஸ்பிர் சிங், அவ்தார் சிங், சப்தில் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.