சாமானியன்: "அப்பா தன் கொள்கையை மாத்திக்கிட்டது ஆச்சர்யமா இருக்கு!" – ராமராஜன் மகள் அருணா பேட்டி

படத்தின் தலைப்பு என்னவோ `சாமானியன்’தான். ஆனால், `வந்தா ஹீரோவாத்தான் வருவேன்’ என அதே கெத்து, அதே கம்பீரத்துடன் கம்பேக் கொடுத்திருக்கிறார் நடிகர் ராமராஜன்.

சமீபத்தில் வெளியான ’சாமானியன்’ இணையத்தில் பேசப்பட்டு வரும் சூழலில், ராமராஜனின் மகள் அருணா ராமராஜனிடம் பேசினேன்…

”’சாமானியன்’ பார்த்தேன். ரொம்ப எமோஷனலா இருந்துச்சு. அதேமாதிரி, ரொம்ப பெருமையாவும் இருந்துச்சு. நல்ல சோஷியல் மெசேஜ். சமூக அக்கறையுள்ள காட்சிகள். இத்தனை வருடம் கழிச்சு அப்பா நடிக்க வந்தாலும் ஒரு தரமான படத்துல நடிச்சு, தான் யாருன்னு மீண்டும் நிரூபிச்சுட்டாரு. தியேட்டருக்குப் போனா கூட்டம் கூட்டமா வந்துட்டு போறாங்க. அப்பாவை மக்கள் இன்னும் மறக்கலைங்கிறதைத்தான் காட்டுது. அதே கிரேஸோடதான் இருக்காங்க.

ராமராஜன் மகள் அருணா, மகன் அருண்

படம் பார்த்துட்டு ‘சாமானியன்’ போஸ்டரோட தியேட்டர்ல நான் எடுத்துக்கிட்ட போட்டோவை அப்பாவுக்கு அனுப்பிட்டு போன் பண்ணி பேசினேன். ’நீங்க ஜெயிச்சுட்டீங்கப்பா… ஆல் தி பெஸ்ட்’ன்னு சொன்னப்போ அவரோட குரலில் அவ்ளோ சந்தோஷம் தெரிஞ்சது. இனிமே அவரோட பயணம் மீண்டும் ஒரு வெற்றிப் பயணம்தான்.

அப்பாவோட இளம்வயது கெட்டப் எல்லாம் ரிப்பீட் மோட்ல பார்க்கிற மாதிரி இருந்துச்சு. மிலிட்டரி கெட்டப்ல கம்பீரமா இருந்தாரு. என் தம்பி அருண் வெளிநாட்டுல இருக்கான். அங்க ரிலீஸ் ஆகாததால அவன் இன்னும் படம் பார்க்கல. நான் எடுத்த வீடியோஸ்லாம் அனுப்பினேன். அவனும் அவன் பசங்களும் பயங்கர ஹேப்பி ஆகிட்டாங்க.

நாம தினமும் நியூஸ் பேப்பர்ல, டிவியில பார்க்கிற உண்மைகளை மையப்படுத்தி எடுத்ததால படம் ரொம்ப ரியாலிட்டியா வந்திருக்கு. அம்மா, படம் இன்னும் பார்க்கல. ரொம்ப பிஸியா இருக்காங்க. படம் ஹிட் ஆனதுல அவங்களுக்கும் ரொம்ப சந்தோஷம். வீடியோஸ்லாம் பார்த்துட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தினாங்க. அவர் இன்னும் நிறைய படங்கள் பண்ணணும், பழைய மாதிரி வரணும்னு சொன்னாங்க.

ராமராஜன்

இதுல முக்கியமா சொல்லணும்னா, அப்பாவுக்கு இந்த ஜானர்ல நடிக்கிறது புதுசு. ஒரு கொள்கையோடு இருப்பாரு. ஆனா இப்போ, ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரி மாறிட்டாரு. ட்ரெண்டுக்கேற்ற மாதிரி அவர் அடாப்ட் பண்ணிக்கிட்டது, அப்டேட் பண்ணிக்கிட்டது பெரிய விஷயம். அவர் இந்த மாதிரி வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கணும்ங்கிறதுதான் எங்களோட விருப்பம். அதுமட்டுமில்லாம, அப்பா எந்த சோஷியல் மீடியாவிலும் இல்ல. பேட்டியும் அதிகமா கொடுக்கமாட்டாரு. எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு அவர் தொடர்ச்சியா பேட்டி கொடுத்திருக்கிறது.

இன்னைக்கு எந்த மீடியாவைத் திறந்தாலும் அவர் முகம்தான் தெரியுது. எல்லா, டிவியிலும் பெரிய புரமோஷன் பண்ணி பேட்டி கொடுத்துக்கிட்டிருக்காரு. அப்பா வெள்ளந்தியான மனிதர். என்ன மனசுல இருக்கோ அதைத்தான் பேசுறார். இப்போ இருக்கிற 2கே கிட்ஸுக்கெல்லாம் அவரோட பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனாலதான் வைரல் ஆகிட்டிருக்காரு!” என்கிறார் நெகிழ்ச்சியாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.