45 மணி நேரம், நீர் ஆகாரம் மட்டும்… – குமரியில் மோடியின் தியானத் திட்டமும், சில தகவல்களும்!

நாகர்கோவில்: பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் நாளை (மே 30) முதல் 45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறார். சுவாமி விவேகானந்தர் இதேபாறையில் 3 நாள் தவமிருந்த 142 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் மோடி தியானம் செய்வதால் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: மக்களவை இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியுடன் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமை உடன் நிறைவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. கடந்த இரு தேர்தல் முடிவடைந்ததுமே பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். 2014-ல் உத்தரப் பிரதேசத்தில் பிரதாப்கரில் தியானம் செய்தார். 2019-ல் இமயமலையில் கேதார்நாத் குகையில் மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் தியானம் மேற்கொண்டார். இந்நிலையில் நடப்பு தேர்தல் முடியும் தருவாயில் பிரதமர் மோடி இந்தியாவின் கடைகோடியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாள் தொடர்ச்சியாக 45 மணி நேரம் தியானம் மேற்கொள்ள இருக்கிறார்.

142 ஆண்டுகளுக்குப் பின்னர்… சுவாமி விவேகானந்தர் இதே விவேகானந்தர் பாறையில் 1882-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் தவம் இருந்தார். அதே பாறையில் தான் தற்போது விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ளது. அங்குள்ள தியான மண்டபத்தில் தான் பிரதமர் மோடி 3 நாள் தியானம் இருக்க உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு வியாழக்கிழமை மாலை 3.55 மணிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு 4.35 மணியளவில் வருகிறார். பின்னர் அவர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு மாலை 5.30 மணியளவில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு தனி படகு மூலம் செல்கிறார்.

45 மணி நேர தியானம்: விவேகானந்தர் பாறை செல்லும் வழியில் திருவள்ளுவர் சிலைக்கும் சென்று மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்கிறார். வியாழக்கிழமை மாலையில் இருந்து ஜூன் 1-ம் தேதி மாலை வரை விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்கிறார். அவர் தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு மேல் தியானம் செய்யவுள்ளார். இதற்காக பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டபம் பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

திருவனந்தபுரத்தில் இருந்து…. ஜூன் 1-ம் தேதி மாலை 3 மணியளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி தியான மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார். அதன்பின்னர், படகு மூலமாக கரை திரும்பும் பிரதமர் மோடி, மாலை 3.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர், அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 3000 போலீஸார்… பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் தலைமையில் 8 எஸ்பிக்கள் அடங்கிய 3000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களிலும் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சுற்றுலாப் பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்யும் 3 நாட்களும் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சேவையும் ரத்து செய்யப்படவுள்ளது.

படகு போக்குவரத்து நிறுத்தம்: கன்னியாகுமரியில் இன்று படகு இல்லம் செல்லும் நுழைவு வாயிலில் பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே சுற்றுலா பயணிகளை படகு சவாரிக்கு அனுமதித்தனர். சுற்றுலா பயணிகள் சோதனைக்கு பின்னர் டிக்கெட் எடுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு தகராறு மூண்டது. இதனால் புதன்கிழமை பகல் 12 மணியளவில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

விவேகானந்தர் பாறையிலும் இன்று மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். கடலோர காவல்படையினர், மற்றும் மெரைன் போலீஸார் கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை படகில் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குமரி மாவட்டம் முழுவதும் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர் ஆகாரம் மட்டுமே உணவு! பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், பழச்சாறு போன்ற நீர்ஆகாரங்களை மட்டுமே பருக இருப்பதாக விவேகானந்தர் மண்டப பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் இருக்கும் வசதிகளுடன் அவர் தியானம் மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்த நிலையில், தியான மண்டபத்திலும், அவர் தங்கும் அறையிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறை பகுதியில் மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். பிரதமர் மோடி விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகின் வெள்ளோட்டமும் இன்று நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.