“ராணுவத்தில் பணியாற்றிவிட்டு அக்னிபாத் திட்டம் பற்றி ராகுல் பேசட்டும்” – வி.கே.சிங் பதிலடி

ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய பின்னர் அக்னிபாத் திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசட்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார். நாட்டில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி கடைசி மற்றும் 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி ஹரியாணா மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுவோம்.

இத்திட்டத்தை பிரதமர் அலுவலகம் உருவாக்கியதே தவிர, ராணுவம் அல்ல. முதல்முறையாக இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றியுள்ளார். இந்தத் திட்டத்தால் ராணுவ வீரர்கள் பாதிக்கப்படுவர்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலடி தரும் விதமாக மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் நேற்று கூறும்போது, “ராகுல் காந்தி முதலில் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றட்டும். அதன் பின்னர் அவர் அக்னிபாத் திட்டம் குறித்து பேசலாம்.

ராணுவம் குறித்து தெரியாத ஒருவர் இதுகுறித்து பேசுவது சரியானது அல்ல” என்றார். மத்திய இணை அமைச்சரான வி.கே.சிங், ராணுவத்தில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.