குடிபோதையில் அண்ணனை வெட்டிக்கொன்று குப்பையில் வீசிய லாரி டிரைவர் – தர்மபுரி சம்பவம்!

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பஞ்சாயத்து சொக்காந்தள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரின் மனைவி ரத்தினம்மாள். இவர்களுக்கு மோகன், ரகு என்ற மகன்கள் உள்ளனர். சின்னசாமி இறந்துவிட்டார். மோகன் திருமணம் செய்யாமல் கூலி வேலைக்கு சென்று வந்தார். லாரி டிரைவர் ஆன ரகுவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அண்ணன் தம்பி இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுடன் தாய் ரத்தினம்மாளும் வசித்து வருகிறார்.

மோகன், ரகு ஆகியோர் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். அப்போது அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அறிந்து கொண்டிருக்கும் போது மோகன், ரகுவிடம் `நான் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்கிறேன். நீ திருமணம் செய்து கொண்டு மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறாய். எனக்கு திருமணம் செய்து வைக்க யார் இருக்கிறார்கள்?’ எனக் கூறி தம்பியின் திருமண வாழ்க்கையை குத்தி காட்டி பேசியுள்ளார்.

கைது

மேலும் அவர்களுக்குள் நிலப்பிரச்னையும் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து பேசியபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டிற்குள் சென்ற ரகு அரிவாளை எடுத்து வந்து மோகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து அவரது உடலை எடுத்து அந்த பகுதியில் உள்ள குப்பை மேட்டில் வீசியுள்ளார்.

பின்னர் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உடலை அங்கு கிடந்த குப்பைகளைக் கொண்டு மூடி வைத்துள்ளார். தொடர்ந்து போதையில் இருந்த அவரும் வீட்டின் அருகே படுத்து தூங்கிவிட்டார். நேற்று அதிகாலை போதை தெளிந்து எழுந்த ரகு தன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்பொழுது தனது மனைவியிடம் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு அண்ணன் மோகன் வெட்டி கொலை செய்து விட்டதாகவும் உடலை குப்பை மேட்டில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி உடனடியாக மாமியார் ரத்தினம்மாளிடம் தெரிவித்துள்ளார். அப்போது ரகு வீட்டில் இருந்து வெளியே சென்று தலைமுறைவாகியுள்ளார். இது பற்றி ரத்தினம்மாள் காரிமங்கலம் போலீஸில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீஸார் குப்பைமேட்டில் கிடந்த மோகனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரகுவை நேற்று மதியம் பிடித்து, அவரிடம் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.