மருத்துவக் காப்பீடு நடைமுறை: தமிழக அரசுக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை

சென்னை: அகவிலைப்படி உயர்வை வழங்கிய பிறகு மருத்துவக் காப்பீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என போக்குவரத்து ஓய்வூதியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநிலத் தலைவர் டி.கதிரேசன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வு பெற்ற 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மிகக் குறைந்த ஓய்வூதியத்தில் வாழ்ந்து வருகிறோம். அரசு ஊழியர்களை போல எங்களுக்கும் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் எங்களுக்கான அகவிலைப்படி உயர்வை அரசு நிறுத்திவிட்டது. இதனால் மிகக் குறைந்த ஓய்வூதியம் பெறும் நாங்கள், மருத்துவ சிகிச்சைக்குக்கூட பணமில்லாமல் மருத்துவக் காப்பீடு, அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார். ஆனால், 3 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதேசமயம், நீதிமன்றத்தில் முறையிட்டபோது அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட்ட பின்னரும், அரசு மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தி வருகிறது.

இதற்கிடையே, மருத்துவக் காப்பீடு வழங்குவது தொடர்பான அறிவிப்பில், முன்தொகை ரூ.7,054, மாதாந்திர பிரீமியம் ரூ.540 செலுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால், அரசு ஓய்வூதியர்கள் முன் தொகை செலுத்துவதில்லை. மாதாந்திர பிரீமியமும் ரூ.497 மட்டுமே செலுத்துகின்றனர். எனவே, இந்தத் திட்டத்தை போக்குவரத்து ஓய்வூதியர்கள் புறக்கணித்து வருகின்றனர்.

அரசு முதலில், 9 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை முதலில் வழங்க வேண்டும். அதன் பிறகு அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல் ரூ.497 பிடித்தம் செய்யும் வகையிலான மருத்துவக் காப்பீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.