செயலி மூலம் கடன் தருவதாக ரூ.40,000 மோசடி; குடும்பத்துடன் தற்கொலை முயற்சி… குழந்தை உயிரிழந்த சோகம்!

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர், 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறார். இவர், சிவகங்கையைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இத்தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை இருந்தாள். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரடிவாவி கிராமத்தில் உள்ள நூல் மில்லில் அந்த இளைஞர் வேலை செய்து வந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இளைஞர் தனது பேஸ்புக் வலைதளத்தைப் பயன்படுத்தியபோது, அதில் வந்த ஆன்லைன் கடன் செயலி லிங்க்கை செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த செயலியை பதிவிறக்கம் செய்த உடனே வாட்ஸ் அப் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் மறுமுனையில் பேசியவர், விவரங்களைக் கேட்ட பின் இளைஞருக்கு ரூ.2 லட்சம் வரை கடன் பெற தகுதி உள்ளது. அதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் அதற்கான கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இளைஞர்

அதை நம்பி நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் கடன் பெற்று ரூ.40 ஆயிரத்தை அவர்கள் அணுப்பிய கூகுள் பே எண்ணில் அந்த இளைஞர் கட்டியுள்ளார். பணத்தைப் பெற்ற பின் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. கடன் கொடுத்தவர்களும் அழுத்தம் கொடுக்கவே, மனஉளைச்சலுக்கு உள்ளானார். அதையடுத்து கரடிவாவி பேருந்து நிலையத்தில் வைத்து அந்த இளைஞர், அவரின் மனைவி ஆகிய இருவரும் எலி மருந்தை சாப்பிட்டதுடன், தங்கள் குழந்தைக்கும் கொடுத்துள்ளனர்.

மோசடி

குழந்தை வாந்தி எடுத்து மயங்கவே, இதைக் கண்ட சிலர் இதுகுறித்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர்கள் மூவரும் மீட்கப்பட்டு, பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். இளைஞர், அவரின் மனைவி ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செயலி மூலம் கடன் தருவதாக நடைபெற்ற மோசடியில், குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.