பாகிஸ்தானுடன் வெற்றி பெற்று இருந்தாலும் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!

India vs USA: டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி ஜூன் 5 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நியூயார்க்கில் நடைபெற்ற அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் ஏ ஆட்டத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ரன்களை அடித்தும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி அடுத்ததாக அமெரிக்காவிற்கு எதிராக விளையாட உள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான டி20 போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 12 புதன்கிழமை நடைபெற உள்ளது. குரூப் ஏவில் இதுவரை தோல்வியை சந்திக்காத இரண்டு அணிகள் இந்தியா மற்றும் அமெரிக்கா தான். புதன் கிழமை நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெரும். 

ஒருவேளை இந்த போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டால் பாகிஸ்தான் சூப்பர் 8க்கு தகுதி பெறாமல் வெளியேற அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் அணியில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம் பேட்டிங்கில் சில இடங்கள் வீக்காக உள்ளது. அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டரில் ஷிவம் துபேக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2024ல் இருந்தே துபே பார்மில் இல்லை. அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துபே பந்துவீசவில்லை. எனவே அவருக்கு பதில் வேறு ஒருவர் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. 

ஜெய்ஸ்வால் இடம் பெறுவாரா?

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மீண்டும் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒபெனிங்கில் விளையாடுவதால் ஜெய்ஸ்வால்க்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி 1 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே மீண்டும் விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்கினால் ஜெய்ஸ்வால் ரோஹித்துடன் ஓபன் செய்ய வேண்டும். பவர்பிளேயில் ஆட்டத்தை மாற்ற கூடிய பண்பு அவரிடம் உள்ளதால் அணியில் இந்த மாற்றம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. 

மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் இதுவரை சிறப்பாக பந்து வீசி உள்ளனர். மேலும் ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜடேஜா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஜடேஜா கடந்த போட்டியில் 0 ரன்களுக்கு அவுட் ஆகி இருந்தாலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

அமெரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் உத்ததேச அணி: ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.