கந்து வட்டிக் கொடுமை; தற்கொலை செய்துகொள்ள மெரினாவுக்கு வந்த கோவை பெண் – காப்பாற்றப்பட்டது எப்படி?

கோயம்புத்தூரை சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவர் கணவரை பிரிந்து தன்னுடைய மகன், மகளுடன் தனியாக வசித்து வருகிறார். குடும்பத்தைக் காப்பாற்ற உமா, டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்ட கோவையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரிடமிருந்து உமா, இரண்டரை லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். அதற்கு வட்டியாக மாதந்தோறும் 12 ஆயிரத்து 500 ரூபாயை விஜயகுமாருக்கு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் உமா சிக்கினார். அதனால் அவரால் வேலை செல்லவில்லை. இதன் காரணமாக உமாவால், வட்டி பணத்தை கொடுக்கவில்லை. அதனால் வட்டி மற்றும் அசல் தொகையைக் கேட்டு டிரைவர் உமாவுக்கு விஜயகுமார் தொல்லைக் கொடுத்திருக்கிறார். அதனால் தற்கொலை செய்துகொள்ள உமா முடிவு செய்தார்.

உமாவிடம் விசாரிக்கும் போலீஸ்

இதற்காக அவர் ரயில் மூலம் சென்னைக்கு வந்திருக்கிறார். அப்போது உமாவின் 14 வயது மகனும் அவருடன் அடம்பிடித்து ரயிலில் ஏறியுள்ளார். சென்னை சென்ட்ரலுக்கு வந்த உமாவும் அவரும் மகனும் எங்கு செல்வது எனத் தெரியாமல் அன்றைய தினம் இரவு ரயில் நிலையத்திலேயே தங்கியிருக்கிறார்கள். பின்னர் காலையில் மெரினா கடற்கரைக்கு வந்த இருவரும் அங்கேயே பொழுதை கழித்திருக்கிறார்கள். இரவானதும் மெரினா கடற்கரையில் தங்க முடியாமல் மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள். இப்படி கடந்த 5 நாள்களாக உமாவும் அவரின் மகனும் ரயில் நிலையத்திலேயே தங்கியிருந்திருக்கிறார்கள். இதற்கிடையில் மகள் உமாவையும் பேரனையும் காணவில்லை என உமாவின் அம்மா கோவை முழுவதும் தேடியிருக்கிறார். பின்னர் உமாவுக்கு தெரிந்தவர்களுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். உமாவுக்கு போன் செய்து பார்த்தபோது அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் என பதில் வந்திருக்கிறது. இந்தச் சூழலில்தான் உமாவும் அவரின் மகனும் சென்னையிலிருப்பது அவரின் குடும்பத்தினருக்கு தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து சமூக ஆர்வலர் சசிகுமார் என்பவர் மூலம் மெரினா கடற்கரையிலிருந்த உமாவையும் அவரின் மகனையும் குடும்பத்தினர் கண்டறிந்நதனர். பின்னர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரும் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சென்னை போலீஸார், உமாவிடம் விசாரணை நடத்தியபோது வட்டி பணம் கொடுக்காததால் தற்கொலை செய்ய முடிவு செய்து சென்னை வந்த தகவலை தெரிவித்தார். இதையடுத்து உமாவுக்கு அறிவுரை கூறிய போலீஸார், அவரையும் அவரின் மகனையும் ரயில் மூலம் கோவைக்கு திரும்பி அனுப்பினர். கோவை சென்ற உமாவை அவரின் அம்மாவும் உமாவின் மகளும் கட்டித்தழுவி கதறி அழுத காட்சி காண்பவர்களின் கண்களை கலங்க செய்தது. இதற்கிடையில் வட்டி விவகாரத்தில் உமா சென்னை வந்த தகவலைக் கேள்விப்பட்ட வட்டிக்கு பணம் கொடுத்த விஜயகுமார், உமாவை போனில் தொடர்பு கொண்டு சமரசமாக பேசியிருக்கிறார்.

உமா

இதுகுறித்து உமாவிடம் பேசினோம். “தற்கொலை செய்து கொள்ளும் முடிவில்தான் வீட்டிலிருந்து கால்போன போக்கில் சென்றேன். கோவை ரயில் நிலையத்துக்கு வந்தபோது அங்கு நின்ற ரயிலில் ஏறினேன். அப்போது என்னை பின்தொடர்ந்து வந்த என்னுடைய மகனும் அந்த ரயிலில் அடம் பிடித்து ஏறினான். இதையடுத்து அந்த ரயிலில் சென்னை வந்திறங்கினேன். என்னுடைய செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டதால் யாரும் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில்தான் மெரினா கடற்கரைக்குச் சென்றேன். ஆனால் என்னுடைய மகனின் முகம்தான் என்னுடைய முடிவை மாற்றியது. கோவைக்கு திரும்பி சென்றால் மீண்டும் வட்டி பணம் கேட்டு தொல்லை செய்வார்கள் என கருதி சென்னையிலேயே கடந்த 5 நாள்களாக தங்கியிருந்தேன். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு தூங்கி விட்டு காலையில் மெரினாவில் கடற்கரை அலையை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் என்னுடைய அம்மா, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் உதவியுடன் என்னைக் கண்டுபிடித்து விட்டார். அதனால் மீண்டும் கோவைக்கு சென்று விட்டேன். நிச்சயம் லோடு ஆட்டோ ஓட்டி என்னுடைய கடனை அடைத்து விடுவேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.