நாங்கள் இன்னும் 15 ரன்கள் எடுத்திருந்தால் இந்திய அணிக்கு கடினமான இலக்காக மாறி இருக்கும் – அமெரிக்க கேப்டன்

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவை சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அமெரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் இன்னும் 10 முதல் 15 ரன்கள் எடுத்திருந்தால் இந்திய அணிக்கு கடினமான இலக்காக மாறி இருக்கும்.

சில சமயங்களில் போட்டி இப்படித்தான் போகும். எங்களுடைய வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக களத்தில் விளையாடினார்கள். எங்களுடைய பவுலிங் யூனிட் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் இதைத்தான் அமெரிக்க கிரிக்கெட்டுக்காக செய்ய விரும்பினோம். தற்போது நாங்கள் சில விஷயங்களை மறுபரிசீலனை செய்வோம்.

சில அணி கூட்டங்களை நடத்தி நாங்கள் மீண்டும் வலிமையாக திரும்பி வருவோம். இந்த விக்கெட் கொஞ்சம் ட்ரிக் ஆனது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது. இதனால்தான் நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தவில்லை. மோனக் படேல் எங்கள் கடைசி ஆட்டத்திற்கு முன் தகுதி பெற்று விடுவார் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.