கீழமை நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசத்தை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமைப் பதிவாளரும், நீதித்துறை பதிவாளருமான ஜெ.செல்வநாதன் பிறப்பி்த்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு நடத்தும் பொருட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை சார்பில் ஏற்கெனவே அறிவிப்பாணை வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இந்த பதவிகளுக்கான இணையதள விண்ணப்பத்தை பதிவு செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் கால அவகாசம் வரும் ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்தி இதுவரையிலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காத தகுதியான விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 26 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்தியன் வங்கியில் சலான் மூலமாக விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியும் வரும் ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. முழுமையடையாத விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவர்கள், அதே பயனாளர் குறீயீட்டைப் பயன்படுத்தி அந்த விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment என்ற இணையதள முகவரியை அணுகலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.