புதுடெல்லி: எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 156 இலகு ரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பிரச்சாந்த் இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 156 ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இவற்றில்90 ஹெலிகாப்டர்கள் ராணுவத்துக்கும், 66 ஹெலிகாப்டர்கள் விமானப்படைக்கும் வழங்கப்படும்.
எச்ஏஎல் நிறுவனத்தின் பிரச்சாந்த் இலகு ரக ஹெலிகாப்டர் 5.8 டன் எடை உள்ளது. இதில் இரண்டு இன்ஜின் உள்ளது. இதில் உள்ள ஆயுதங்கள் மூலம் எதிரிகளின் பீரங்கி வாகனம், பதுங்கு குழிகள்மற்றும் டிரோன்களை அழிக்க முடியும். சியாச்சின் பனிமலை போன்ற உயரமான மலைப் பகுதிகளிலும் இந்த ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்த முடியும். ரேடார்களில் சிக்காது. இரவு நேரத்திலும் இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும்.