Maharaja: “எனக்கெல்லாம் கூட்டம் வராது என்றார்கள்; ஆனால்…"- விஜய் சேதுபதி

‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படம் ‘மகாராஜா’.

அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளைப் பற்றிப் பேசும் இத்திரைப்படத்திற்கு ஒரு சில விமர்சனங்கள் எழுந்தாலும், திரைக்கதை, நடிப்பு உள்ளிட்டவை பாராட்டுகளைப் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

மகாராஜா – சினிமா விமர்சனம்

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “கதை கேட்கும்போது ஒரு பிரமிப்பும், நம்பிக்கையும் இருக்கும். நடிக்கும்போது நாம் செய்தது சரியாக வருமா, முழு திரைப்படமாக எப்படி இருக்கும் என்பதையெல்லாம் சரியாகக் கணிக்க முடியாது. ஒளிப்பதிவாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சொல்லும்போதுதான் அப்படத்தின் மீது ஒரு நம்பிக்கைக் கிடைக்கும். அதுவரையிலும் ஒருவிதப் பதற்றம் இருந்துகொண்டேதான் இருக்கும்.

படம் வெளியாவதற்கு முன்பு பிரத்யேகக் காட்சியில் இப்படத்தைப் பார்த்து பத்திரிகையாளர்கள் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மக்களிடையேயும் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. அன்றைய இரவு எனக்கு அவ்வளவு இனிமையாக இருந்தது. இத்திரைப்படம் ஆவரேஜ் அல்லது ஆவரேஜுக்கும் அதிகமாக ஓடி, போட்ட பணம் தயாரிப்பாளருக்கு வந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். படம் நல்ல வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி.

விஜய் சேதுபதி

எனது முந்தைய திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. ‘விஜய் சேதுபதிக்கு பேனர் வைத்தால் கூட்டமா வரப்போகுது’ என்று திரையரங்கில் ஒருவர் சொன்னதாக நண்பர் என்னிடம் கூறினார்.

என்னுடைய கடந்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாததால் இப்படி பல பேச்சுகள் என்னைச் சுற்றிக் கொண்டிருந்தன. அதற்கெல்லாம் பதிலாக இப்படம் அமைந்ததில் மகிழ்ச்சி. என் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இப்படத்தை எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் அது சரியாக வந்திருக்காது. அதுவாகவே சரியாக அமைந்துவிட்டது. இத்திரைப்படம் எனது 50வது திரைப்படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தந்து, என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.” என்றார் விஜய் சேதுபதி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.