பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை

வாஷிங்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார். இது தொடர்பாக திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, தனது விடுதலைக்கு ஈடாக ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள அசாஞ்ச் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார். அவர் இந்த வார இறுதியில் அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அங்கே அவர் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்திய குற்றங்களை ஒப்புக் கொள்கிறார்.

யார் இந்த அசாஞ்ச்? ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜுலியன் அசாஞ்ச் கடந்த 2006-ம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010-ல் ஆப்கானிஸ்தான், இராக் போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.

இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சை கைது செய்ய கடந்த 2010-ம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலீஸார், ஜூலியன் அசாஞ்சை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்ச் மீது அந்த நாட்டு அரசு சுமத்தி உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது.

ஜூலியன் அசாஞ்ச் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.

அவர் பிரிட்டனில் இருந்து கிளம்பியதையும் வரும் புதன்கிழமை அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதையும் விக்கிலீக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் விக்கிலீஸ்ட் எக்ஸ் சமூகவலைதளத்தில், “ஜூலியன் அசாஞ்சே விடுதலையானார். 1901 நாட்களுக்குப் பின்னர், ஜூன் 24 காலை பெல்மார்ஷ் அதிகபட்ச பாதுகாப்புச் சிறையிலிருந்து அவர் வெளியேறினார். இதுஉலகளாவிய பிரச்சாரத்தின் விளைவு.

5 வருடங்களுக்கும் மேலாக 2x3 மீட்டர் அறையில், 23 மணிநேரமும் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, அவர் விரைவில் தனது மனைவி ஸ்டெல்லா அசாஞ்ச் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் மீண்டும் இணைவார், அவர்கள் தங்கள் தந்தையை கம்பிகளுக்குப் பின்னால் இருந்து மட்டுமே அறிந்திருக்கிறார்கள்."என்று குறிப்பிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.