பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. அவரது வீட்டு பணிப்பெண், கட்சியின் பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் அளித்த புகாரில், பிரஜ்வல் ரேவண்ணா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணாவும் (66) வீட்டு பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே வழக்கில் அவரது மனைவி பவானி (60) முன் ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பிரஜ்வலின் அண்ணனும் மஜத எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா (36) மீது மஜதவை சேர்ந்த 24 வயதான தொண்டர் பாலியல் புகார் அளித்தார். அதில், பண்ணை வீட்டில் தன்னை கட்டாயப்படுத்தி தன் பாலின உறவில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் தன்னையும் தனது குடும்பத்தாரையும் கொன்றுவிடுவதாக சூரஜ் ரேவண்ணா மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த ஹொலே நர்சிப்பூர் போலீஸார் நேற்று முன் தினம் நள்ளிரவில் சூரஜ் ரேவண்ணாவை கைது செய்தனர். அவரை 42-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால், நீதிமன்றம், ஜூலை 1-ம் தேதிவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.
கர்நாடக உள்துறை இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் பி.கே.சிங் தலைமையிலான சிஐடி போலீஸாரே இவ்வழக்கையும் விசாரிக்கஉத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சூரஜ் ரேவண்ணா ஹாசனில் இருந்து நேற்று மாலை பெங்களூரு கொண்டு வரப்பட்டார். அங்குள்ள சிஐடி அலுவலகத்தில் 3 பெண் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.