“பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுக” – ஆந்திர முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “முல்லைப் பெரியாறு, காவிரி – மேகேதாட்டு, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழகத்தின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம். பாலாற்றில் தமிழகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழகத்தில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழகத்தின் வடமாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழகத்தின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.

முல்லைப் பெரியாறு, காவிரி-மேகேதாட்டு, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழகத்தின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம். பாலாற்றில் தமிழகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன்.

எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திமுக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.