அரையிறுதி போட்டி: ரோகித் அரைசதம்… இங்கிலாந்து அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இந்தியா

கயானா,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சிறிது நேரத்தில் ரிஷப் பண்ட்டும் (4) தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இக்கட்டான நிலையில் ரோகித்துடன் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நடுவே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது.

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, அரைசதம் அடித்த நிலையில், 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், சிக்ஸ் அடிக்க முயன்று எல்லைக்கோடு அருகே கேட்ச்சாகி ஆட்டமிழந்தார். ஹர்திக் 23 ரன்கள் எடுத்தார். சிவம் துபே டக் அவுட்டானார். அக்சர் படேல் 10 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 17 ரன்களுடனும், அர்ஸ்தீப் சிங் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.