Nesippaya: "அப்பாவுக்கும் எனக்கும் தந்ததைவிட என் தம்பிக்கு அதிகமா ஆதரவு கொடுங்க!" – அதர்வா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’.

இப்படத்தின் மூலம் நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர நயன்தாரா, அதர்வா, ஆர்யா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

ரவிக்குமார்

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “புது வசந்தம் படத்தில் நான் அஸோசியேட் ஆக இருந்தேன். முரளி கூட இருந்த பழைய நினைவுகளை மறக்கவே முடியாது. என்கூட ‘சமுத்திரம்’ படம் பண்ணாரு. ‘புதுவசந்தம்’ படம் பண்ணும் சமயத்தில் ஒரு பிரச்சனை வந்துச்சு. அதை அவர் வீட்டில் வச்சுதான் பேசி முடித்தார். அந்த சமயத்தில் இருந்து முரளிகூட நெருக்கமாகிட்டேன். இப்போது ஆகாஷைப் பார்க்கும்போது ‘உதயா’ பட நாக அர்ஜுனா மாதிரி இருக்காரு. அதிதி முதல் படத்திலேயே நான் வாழ்த்தினேன். இவங்க இரண்டு பேரையும் வைத்து இன்னொரு படம் பண்ணலாம்னு நினைக்கிறேன்” என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய நடிகர் அதர்வா, “ரொம்ப சந்தோஷமான நாள் எனக்கும் என் குடும்பத்துக்கும். எனக்கு யுவன் சார்தான் முதல் படம் பண்ணாரு. ஒரு சில வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பா இறந்தார். நான் அவருடைய மனநிலை எப்படி இருக்கும்னு நெனச்சு பார்க்கவில்லை. ஆனால் இன்றைக்கு அப்பா எப்படி பீல் பண்ணிருப்பாருனு தெரிகிறது.

அதர்வா

அப்பா இறந்த சமயத்தில் ஆகாஷ் ரொம்ப சின்ன பையன். நான் அவன் முன்னாடி அழுக கூடாதுனு நெனச்சேன். ஆனால் ஒரு கட்டத்தில் அழுதுவிட்டேன். அப்போது அவன் என்கிட்ட வந்து பார்த்துக்கொள்ளலாம் விடுனு சொன்னான். அது இப்போது வரைக்கும் நினைவில் இருக்கிறது. அப்பாவுக்கும் எனக்கும் என்ன ஆதரவு கொடுத்தீர்களோ. அதைவிட ஒரு படி மேலேயே என் தம்பிக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார் நெகிழ்ச்சியாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.