தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் வரும் ஜூலை 12ம் தேதி திருமணம் செய்து வைக்கிறார். இத்திருமண ஏற்பாடுகள் மிகப்பெரிய அளவில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. முதலில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் என்று கூறி கடந்த மார்ச் மாதம் இறுதியில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மிகப்பெரிய அளவில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்கு உலகம் முழுவதும் இருந்து தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர், பாலிவுட் நட்சத்திரங்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அடுத்ததாக இம்மாத தொடக்கத்தில் ஆனந்த் அம்பானி தனது நண்பர்களுக்குச் சொகுசு கப்பலில் விருந்து கொடுத்தார். இப்போது திருமணத்தின் இறுதிப் பகுதி நெருங்கி இருக்கிறது. வரும் 12ம் தேதி மும்பையில் இத்திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்காக இரண்டு வகையான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.
வி.ஐ.பி.க்கள் மற்றும் வி.வி.ஐ.பி.க்களுக்காக தனியாக ஒரு அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழோடு வெள்ளிக்கோயிலும் வடிவமைப்பும் சேர்த்து கொடுக்கப்படுகிறது. வெள்ளி கோயிலில் தங்கத்தில் செய்யப்பட்ட ராதா கிருஷ்ணா மற்றும் விநாயகர் தெய்வங்கள் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழில் அம்பானியின் பிரத்யேக அழைப்பு கடிதம் இருக்கிறது. வி.ஐ.பி.க்களுக்கு கொடுக்கப்படும் அழைப்பிதழில் இந்த இரண்டும் சேர்த்து கொடுக்கப்படும். இந்த அழைப்பிதழ் ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன், ஷாருக்கான், அக்ஷய் குமார், சல்மான் கான், அமீர் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், மகேந்திர சிங் தோனி ஆகியோர் வழங்கப்பட்டுவிட்டன. இரண்டாவது வகை திருமண அழைப்பிதழில் பெரிய வெள்ளி கோயில் இருக்காது. சிறிய வெள்ளி கோயிலும், தங்கத்தினால் ஆன தெய்வ சிலைகளும் இருக்கும்.
திருமண சடங்குகள் இன்று பூஜையுடன் தொடங்குகிறது. இப்பூஜைக்காக உறவினர்கள் அம்பானி வீட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டனர். மும்பையில் உள்ள ஜியோ வேல்டு செண்டரில் திருமண சடங்குகள் மூன்று நாட்கள் நடக்கிறது. ஜூலை 12ம் தேதி ‘சுப விவாஹ்’ அதனை தொடர்ந்து அடுத்த நாள் ‘சுப ஆசீர்வாத்’ மற்றும் 14ஆம் தேதி மங்கள் உற்சவ் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிக்கும் எந்த மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகனின் திருமணத்திற்கு முன்பு ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க அம்பானி தம்பதி முடிவு செய்துள்ளது. வரும் 2ஆம் தேதி மும்பை அருகில் உள்ள பால்கரில் சுவாமி விவேகானந்த் வித்யாமந்திரில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 4.30 மணிக்கு நடக்கும் திருமணத்தில் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
முன்னதாக நேற்று இரவு அம்பானியின் மும்பை இல்லத்திற்கு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விருந்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உட்பட பலர் கலந்து கொண்டனர். மணப்பெண் ராதிகா மெர்ச்சண்ட் மிகவும் எளிய முறையில் காட்சியளித்தார். ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து இத்திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கான சேலைகளை முகேஷ் அம்பானி மனைவி நிதா அம்பானி உத்தரப்பிரதேசத்தில் சென்று வாங்கி வந்துள்ளார்.
மருந்து கம்பெனி அதிபரான தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட் மகள் ராதிகாவிற்கும், ஆனந்த் அம்பானிக்கும் இடையே 2017ம் ஆண்டில் இருந்து நட்பு இருந்து வந்தது. இருவரும் சில ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்தனர். அதனை தொடர்ந்தே ராதிகாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று ஆனந்த் அம்பானி கேட்டு, சம்பதம் பெற்றுள்ளார்.