டெல்லி மெட்ரோவில் நேற்று ஒரே நாளில் 69 லட்சம் பேர் பயணம்

புதுடெல்லி,

டெல்லியின் பல பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியது. போக்குவரத்து நெரிசல், மழை தொடர்பான விபத்துகள், காயங்கள் உள்ளிட்டவை ஏற்பட்டன.

இதனால், நிலைமையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சூழலில், டெல்லியில் நேற்று ஒரே நாளில் 69 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் இன்று தெரிவித்து உள்ளது.

நகரில் கனமழை பெய்த நிலையிலும், மெட்ரோ ரெயில் சேவை எந்தவித இடையூறும் இன்றி செயல்பட்டதுடன், ரெயில்கள் 99.95 சதவீதம் அளவுக்கு சரியான நேரத்திற்கு வந்து அடைந்தன.

இதன்படி, மெட்ரோ ரெயிலில் 69 லட்சத்து 36 ஆயிரத்து 425 பேர் நேற்று பயணித்து உள்ளனர். இது அதற்கு முந்தின நாளை விட குறிப்பிடத்தக்க வகையில் அதிகம் ஆகும். நேற்று முன்தினம் (27-ந்தேதி) 62 லட்சத்து 58 ஆயிரத்து 72 பேர் நேற்று பயணித்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இதனால், ஏறக்குறைய 7 லட்சம் பேர் நேற்று ஒரே நாளில் கூடுதலாக டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் மழைநேரத்தில், தங்களுடைய சொந்த வாகனங்கள் அல்லது பிற வழிகளிலான வாகனங்களில் வழக்கம்போல் பயணிக்காமல், மெட்ரோவை விரும்பி பயன்படுத்தி உள்ளனர் என அதுபற்றி டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவு தெரிவிக்கின்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.