கர்ப்பமான சிறுமிக்கு 18 வயது நிரம்பியது: போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு ஜாமீன்

பெங்களூரு,

பெங்களூருவில் ஒரு பெண் வசித்து வருகிறார். அவருக்கு 18 வயது நிரம்பாத மகள் இருந்தாள். அந்த சிறுமி உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தாள். அப்போது சிறுமியின் உறவுக்கார வாலிபர் ஒருவர் சிறுமியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானாள். முன்னதாக சிறுமியை அந்த வாலிபர் ரகசிய திருமணம் செய்துள்ளார்.

இதற்கிடையே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனே சிறுமியின் தாய், பெங்களூரு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட்டில் வாலிபர் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி உமா இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் கூறுகையில், வாலிபர் தான் கர்ப்பமாக்கிய சிறுமியை ஏற்கனவே திருமணம் செய்துவிட்டார். மேலும் அந்த சிறுமிக்கு தற்போது 18 வயது நிரம்பி விட்டது என்று கூறியதுடன், வாலிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.