சோதனையின்போது திடீரென சீறிப் பாய்ந்து மலையில் மோதிய ராக்கெட்

பீஜிங்:

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்குடன் ஒப்பிடும் வகையில் சீனா தனது செயற்கைக்கோள் தொகுப்பை விண்ணில் நிறுத்துவதற்காக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை பயன்படுத்த உள்ளது. இந்த ராக்கெட்டுகளை உருவாக்கும் பணிகளில் பல தனியார் விண்வெளி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், ஸ்பேஸ் பயோனீர் என்ற நிறுவனம் மிகவும் சக்திவாய்ந்த தியான்லாங்-3 என்ற ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. இந்த ராக்கெட்டின் பல்வேறு நிலைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், நேற்று ஹெனான் மாகாணத்தின் காங்யி கவுண்டியில் உள்ள ஏவுதளத்தில், தியான்லாங்-3 ராக்கெட்டின் அடுத்தகட்ட சோதனை நடத்தப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக ராக்கெட் சீறிப்பாய்ந்து சென்றது. பின்னர் ராக்கெட் வெடித்து தீப்பிடித்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அது கோங்கி நகரின் மலைப்பாங்கான பகுதியில் விழுந்தது. ராக்கெட் சோதனைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று ஸ்பேஸ் பயோனீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“ராக்கெட் அமைப்புக்கும், சோதனை தளத்திற்கும் இடையிலான இணைப்பின் கட்டமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக முதல் கட்ட ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. ராக்கெட் புறப்பட்டதும் அதில் உள்ள கம்ப்யூட்டர் தானாக ஆப் ஆகிவிட்டது. இதனால் 1.4 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியில் ராக்கெட் விழுந்தது” என்றும் ஸ்பேஸ் பயோனீர் விளக்கம் அளித்துள்ளது.

ஸ்பேஸ் பயோனீர் நிறுவனம் செய்த சிறிய தவறால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதன்மூலம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்தியதாகவும் விண்வெளி பார்வையாளர்கள் சிலர் குற்றம்சாட்டினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.