பெண்கள் பாதுகாப்புக்காக 28 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்; இளம்பெண்ணுக்கு சித்தராமையா பாராட்டு

பெங்களூரு,

மத்திய பிரதேசத்தில் ராஜ்கார் மாவட்டத்தின் நடராம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஆஷா மாளவியா. தேசிய அளவில் தடகளை வீராங்கனையான அவர், மலையேற்ற வீராங்கனையாகவும் உள்ளார்.

இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 28 மாநிலங்களுக்கு 28 ஆயிரம் கி.மீ. சைக்கிளிலேயே தனியாக பயணம் செய்வது என முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

சைக்கிளிங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள அவர், கர்நாடகாவின் பெங்களூரு நகருக்கு வந்துள்ளார். இதுபற்றி கேள்விப்பட்ட முதல்-மந்திரி சித்தராமையா இளம்பெண்ணை நேரில் சந்தித்து அவருக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இளம்பெண் ஆஷா மாளவியாவை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய வீரம் நிறைந்த செயல், இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு அதிகாரமளித்தலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

கடந்த ஆண்டு, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி ஆகியோரை ஆஷா மாளவியா நேரில் சந்தித்ததுடன் அவர்களின் வாழ்த்துகளையும் பெற்று கொண்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.