மதுபான கொள்கை ஊழல்: கேஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை காவல்; கவிதா, சிசோடியாவுக்கு 25 வரை நீதிமன்ற காவல்

புதுடெல்லி: டெல்லியில் புதிய மதுபான கொள்கையில் நடைபெற்ற ஊழல் வழக்கில், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கவிதா மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு வரும் 25-ம் தேதி நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் இருக்கிறார். மதுபான கொள்முதல், விநியோகம், பார்கள் போன்ற விஷயத்தில் புதிய கொள்கையை டெல்லி அரசுஅமல்படுத்தியது. இதில் பல கோடிரூபாய் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. முன்னதாக இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.



அதன்பிறகு தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிரிய சமிதி மூத்த தலைவரும் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கே.கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரும் தற்போது சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது நீதிமன்றகாவல் முடிந்ததை அடுத்து நேற்றுடெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கேஜ்ரிவால் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது கேஜ்ரிவால் நீதிமன்ற காவலை வரும் 12-ம்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 29-ம் தேதி சிபிஐகோரிக்கையை ஏற்று அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு வரும் 12-ம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கி ஏற்கெனவே விடுமுறை காலநீதிபதி சுனேனா சர்மா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கவிதா மற்றும் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, புதிய மதுபான கொள்கையில் நடைபெற்ற ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் கவிதா ஆகியோரின் நீதிமன்ற காவலை வரும் 25-ம் தேதி நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார். முன்னதாக கவிதாதாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கவிதா கடந்த மார்ச் 15-ம் தேதிகைது செய்யப்பட்டார். அத்துடன்மதுபான கொள்கை அமல்படுத்தியதில் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை நடைபெற்றது தொடர்பாக மணீஷ் சிசோடியாவை கடந்து ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. அதன்பிறகு அமலாக்கத் துறையும் சிசோடியாவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.