உறவினருடன் கள்ளக்காதல்; முன்னாள் காதலர் மிரட்டல்… பெண் எடுத்த முடிவு?

கோரக்பூர்,

உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் வசித்து வருபவர் பிரியங்கா நிஷாத். இவருடைய உறவினர் பிரிஜேந்திரா நிசாத். பிரியங்காவுக்கு அவருடைய மருமகன் உறவு முறை கொண்ட பிரிஜேந்திராவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், பிரியங்காவுக்கு சிந்து குமார் என்ற முன்னாள் காதலர் ஒருவர் இருந்திருக்கிறார்.

இவர்கள் இருவர் இடையேயான தொடர்பை அறிந்ததும் அவர் கோபப்பட்டு இருக்கிறார். தனியாக இருந்தபோது எடுத்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என பிரியங்காவை மிரட்டி தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வர முயன்றிருக்கிறார்.

இதனால் சிந்து, கள்ளக்காதலுக்கு தடையாக இருப்பார் என உணர்ந்த பிரியங்கா திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். இதன்படி சென்னையில் இருந்த சிந்துவை சில நாட்களுக்கு முன் ஊருக்கு வரும்படி பிரியங்கா அழைத்திருக்கிறார். சிந்துவும் வீட்டில் பெங்களூருவுக்கு செல்கிறேன் என கூறி விட்டு காதலியை பார்க்க கோரக்பூர் சென்றிருக்கிறார்.

சிந்து சென்றதும் பிரிஜேந்திரா, ஆகாஷ் குமார் மற்றும் சிவகுமார் ஆகியோருடன் சேர்ந்து பிரியங்கா அவரை கடுமையாக அடித்து, தாக்கியுள்ளார். இதில் சிந்து உயிரிழந்ததும் அவருடைய உடலை குளத்தில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார், சிந்துவின் பர்ஸ், ஆதார் அட்டை மற்றும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் ஆகியவற்றையும் கைப்பற்றினர். சமூக ஊடகங்களில் சிந்துவின் புகைப்படங்களை வெளியிட்டு அவரை அடையாளம் காண முயன்றனர். அப்போது, சிந்துவின் தந்தை வந்து அடையாளம் காட்டியுள்ளார்.

இதன்பின்னரே, போலீசாரின் விசாரணையில் சிந்துவின் காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, பிரியங்கா, உறவினர் மற்றும் 2 கூட்டாளிகள் என 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.