தேனி: கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த கட்டடம்; கொத்தனார் உயிரிழந்து, இருவர் படுகாயமடைந்த சோகம்!

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பணியில் வெளி மாவட்ட பணியாளர்கள் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனை கட்டடம்

இந்நிலையில் இன்று வழக்கம்போல் நடந்த பணியில் மதுரை, ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் நம்பிராஜன், முனீஸ்வரன் மற்றும் ரத்தினவேல் ஆகியோர் புதிய கட்டடத்தில் உள்ள போர்டிகோ மற்றும் எலிவேஷன் பகுதியில் கட்டடப் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். திடீரென அந்த கட்டடம் இடிந்து அவர்கள்மீது விழுந்து, கட்டட சுவருக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதையறிந்த அங்கு வேலை செய்து கொண்டிருந்த பிற பணியாளர்கள், கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி நம்பிராஜனை சடலமாக மீட்டனர். மேலும் முனீஸ்வரன் மற்றும் ரத்தினவேல் ஆகியோரை படுகாயத்துடன் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த நம்பிராஜன்

இது குறித்து வழக்கு பதிவுசெய்து கம்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக கட்டி வரும் இந்த மருத்துவமனை கட்டடம் தரமற்ற முறையிலும், உரிய தளவாடங்களை பயன்படுத்தி கட்டாததால் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்த பிறகே மீண்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் கட்டடத் தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.