சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் இருவர் பலி: பெண் உட்பட இருவர் படுகாயம்

சிவகாசி: சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜூலை 9) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பெண் உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர்.

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளையார்குறிச்சியில் நாக்பூர் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 80-க்கும் மேற்பட்ட அறைகளில் 200-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பட்டாசுகளுக்கு வெடி மருந்துகளை செலுத்தும் கோட்டைச்சுவர் அறையில் (அறை எண் 62) மணி மருந்து தவறி விழுந்ததில், உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அந்த அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆமத்தூர் அருகே சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (45), முத்துவேல் (45) ஆகிய இருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சித்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரோஜா( 55), செவலூரைச் சேர்ந்த சங்கரவேல்(54) ஆகியோர் 60 சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.