முதிர்ச்சி இல்லாமல் செயல்படுகிறார் ராகுல்காந்தி: மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் குற்றச்சாட்டு

புதுடெல்லி: குழப்பம் மற்றும் பொய்களை மட்டுமே ராகுல் காந்தி பரப்புகிறார் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் கூறினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அயோத்தியில் பாஜகவை தோற்கடித்ததன் மூலம், பாஜக மூத்த தலைவர் அத்வானியால் தொடங்கப்பட்ட ராமர் கோயில் இயக்கத்தை இண்டியா கூட்டணி தோற்கடித் துள்ளது” என்றார்.

சமீபத்திய மக்களவைத் தேர்தலில் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளரை இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி வேட்பாளர் தோல்வியுறச் செய்த நிலையில் ராகுல் இவ்வாறு குறிப்பிட்டார்.



இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சி அடையாத சிறுபிள்ளைத்தனமானவர். அவர் இன்னும் எதிர்க்கட்சித் தலைவருக்கான பக்குவத்தை பெறவில்லை. ராமஜென்மபூமி இயக்கத்தை நாங்கள் தோற்கடித்தோம் என்கிறார். ராமர் எங்கள் வாழ்க்கை, எங்கள் கடவுள், இந்தியாவின் அடையாளம்.

இந்த இயக்கம் பல முறை காங்கிரஸை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்து, தெய்வீக மற்றும் பிரம்மாண்டமான கோயிலை கட்டுவதற்கு வழி வகுத்துள்ளது, ஆனால் ராகுல் காந்தி பொய்களை சொல்கிறார். அவருக்கு பொய் சொல்வது, குழப்பத்தை பரப்புவதை தவிர வேறு எதுவும் தெரியாது. அதனால் தான் ராகுல் சிறுபிள்ளைத்தனமாக தனது மனதில் தோன்றியதை எல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.