ஆல்ரவுண்டராக இரு துறைகளிலும் பங்களிப்பது எப்போதும் சிறப்பான ஒன்று – ஷிவம் துபே

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி அதன் பிறகு அடுத்த 4 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் தனதாக்கி கொண்டது.

இந்த தொடரில் நேற்று 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன், ஷிவம் துபே 12 பந்தில் 26 ரன் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 34 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளும் , துபே 2 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அபிஷேக் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். இந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஷிவம் துபேவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒரு ஆல் ரவுண்டராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்படுவது எப்பொழுதும் சிறப்பான ஒன்று. டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் தடுமாறும் போது ஒரே ஒரு ஷாட் மூலம் நீங்கள் மீண்டும் திரும்பி வந்துவிடலாம். இங்கு கண்டிஷன் மிகவும் நன்றாக இருந்தது. நாங்கள் மிகவும் அனுபவித்து விளையாடினோம். இங்கு பெரிய பவுண்டரி எல்லைகள் இருக்கிறது. மக்களும் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.