கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 6 மணி நேர விசாரணை: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மருத்துவப் பரிசோதனை

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) கேரளாவில் கைது செய்யப்பட்டு கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவரிடம் ஆறரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்ட பிறகு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்தாக யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை 3 முறை ஒத்திவைக்கப்பட்டு விசாரணைக்கு பின் கடந்த 25-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி புகார் அளித்தார்.



இவ்வழக்கு வாங்கல் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது சிகிச்சையின்போது தான் உடனிருக்க வேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கேட்டு மீண்டும் ஜூலை 1-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், சார்பதிவாளர் அளித்த புகாரில் இடம் பெற்றுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் மணல்மேடு தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீடு, தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ், கவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் கடந்த 5-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் சிபிசிஐடி மற்றும் வாங்கல் வழக்கு களில் தாக்கல் செய்திருந்த தலா இரு முன் ஜாமீன் மனுக்கள் கடந்த 6-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 7-ம் தேதி கரூர் பெரியாண்டாங்கோவில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அவர்களது நெசவு தறிக்கூடம், பெட்ரோல் பங்க், எம்ஆர்வி அறக்கட்டளை, உறவினர் வீடு, சென்னையில் உள்ள அவரது வீடு என 6 இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்தினர். அவரது மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 11-ம் தேதி ஆண்டாங்கோவில் அம்மன் நகரில் உள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கவின் தந்தையிடம் கவின் குறித்து விசாரித்தனர்.

மேலும், தகவல் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்த பசுபதி செந்தில் உள்ளிட்ட 14 பேரிடம் கடந்த 11-ம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வழக்கின் முக்கிய நபரான பிரவீண் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கேரளாவில் செவ்வாய்கிழமை கைது செய்து கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

இதையடுத்து அங்கு அதிமுக நிர்வாகிகள் திரண்டதால் போலீஸார் பேரிகார்டுகள் வைத்து சிபிசிஐடி அலுவலகம் உள்ள சாலையில் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்தனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

தொடர்ந்து விஜயபாஸ்கரிடம் ஆறரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடந்த நிலையில் இரவு 9.15 மணிக்கு மேல் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஆர்.விஜயபாஸ்கரையும், பிரவீணையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு இருவரும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.