வேஷ்டி அணிந்ததால் முதியவருக்கு அனுமதி மறுத்த வணிக வளாகம்: பெங்களூருவில் சர்ச்சை

பெங்களூரு: பெங்களூருவில் வணிக வளாகத்தில் வேஷ்டி அணிந்துவந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை பெங்களூரு ஜிடி மாலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட முதியவரை, அவரது மகன் ஜிடி மாலில் உள்ள திரையரங்குக்கு படம் பார்க்க அழைத்துவந்துள்ளார். அதற்காக முன்னரே டிக்கெட் புக் செய்துள்ளனர். அதன்படி, நேற்று படம் பார்க்க வரும்போது முதியவர் வெள்ளை வேஷ்டி, தலையில் முண்டு கட்டி வந்துள்ளார்.

ஆனால், வேஷ்டி அணிந்து மாலுக்குள் நுழைய முதியவரை அங்கிருந்து பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவரது மகன் பாதுகாவலர்களுடன் பேச முயல, வேஷ்டியை மாற்றிவிட்டு வேறு உடையில் வந்தால் மட்டுமே மாலுக்குள் அனுமதி என உறுதியாக கூறி அவர்களை வெளியேற்றியுள்ளனர்.



“நீண்ட தூரத்தில் பயணித்து பெங்களூரு வந்திருப்பதால் உடனே ஆடையை மாற்ற முடியாது” என்று அந்த முதியவரும் அவரது மகனும் பாதுகாவலரிடம், மால் நிர்வாக அதிகாரியிடமும் விளக்குகின்றனர். ஆனால், அதனை அவர்கள் ஏற்க மறுத்து மாலை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துகின்றனர். வேறு வழியில்லாமல், அவர்களும் மாலை விட்டு வெளியேறினர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாக விவகாரம் சர்ச்சையானது. கர்நாடக பாஜகவின் செய்திதொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “கர்நாடக காங்கிரஸ் விவசாயிகளுக்கு எதிரானது” என்று கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளார்.

இதேபோல் கன்னட ஆதரவாளர்களும், கன்னட விவசாயிகளும் இந்த சம்பவத்தை கண்டித்து வேஷ்டி அணிந்து மாலுக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.