திருச்சி: 17 வழக்குகள் நிலுவையில் உள்ள இலங்கை கைதி, மத்திய சிறையிலிருந்து தப்பியோட்டம்!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான் சிறப்பு முகாமில் இலங்கை, பங்களாதேஷ், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போலி பாஸ்போர்ட், வெளிநாடுகளுக்கு தப்ப முயன்றது, விசா முடிந்த நிலையிலும் இந்தியாவில் தங்கி இருந்தது, ஆயுத கடத்தல் என பல்வேறு வழக்குகளில் சிக்கிய வெளிநாட்டவர்கள் அந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த அப்துல் ரியாஸ் கான் என்பவர் இன்று காலை, தான் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை எண் 9-ன் ஜன்னல் கம்பியை வளைத்து உடைத்து, அங்கிருந்து தப்பியோடி விட்டார். இலங்கையைச் சேர்ந்த இவர்மீது சென்னை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

திருச்சி மத்திய சிறை

இந்நிலையில், அந்த கைதி தப்பியோடியது குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். ஏற்கனவே, கடந்த 2019 – ம் ஆண்டு பல்கேரியா நாட்டைச் சேர்ந்த லிலியானா டிராக்கோவ் (வயது: 55) என்பவர், ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தப்பி ஓடினார். அப்படி, தப்பி ஓடிய அவரை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், மேலும் ஒருவர் தப்பி ஓடிய நிகழ்வு திருச்சி சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.