Panchayat: இதுதான் `ரியல் இந்தியன்' கிராமம்; பாலிவுட் காட்டத் தவறிய பக்கங்கள் – அடிதூள் வெப் சீரிஸ்!

அபிஷேக் திரிபாதிக்கு (ஜிதேந்திர குமார்) உத்தரப் பிரதேச குக்கிராமமான புலேராவில் பஞ்சாயத்துச் செயலாளராக (சச்சீவ்) வேலை கிடைக்கிறது. நகர வாழ்க்கையில் சொகுசாகப் படிப்பை முடித்த அவருக்கு அங்கே செல்ல சற்றும் மனமில்லை. எப்படியாவது ஐ.ஐ.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு வேறுவழியில்லாமல் தற்காலிகமாக புலெராவுக்குள் நுழைகிறார். அந்த குக்கிராமம் அவரை எப்படி வரவேற்கிறது, அவர் காணும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை உணர்வுபூர்வமாகவும் நகைச்சுவை கலந்து ஃபீல் குட் ஷோவாகவும் 3 சீசன்கள் கடந்து அமேசான் பிரைமில் தந்து கொண்டிருக்கிறது ‘பஞ்சாயத்’ வெப் சீரிஸ்.

சந்தன் ராய், பைசல் மாலிக், ஜிதேந்திர குமார், ரகுபீர் யாதவ்

கிராமத்துக்குள் நுழைந்தவுடன் அவருக்குள் எழும் தனிமை, சலிப்பு, விரக்தி ஆகியவற்றை லாகவமாக தன் நடிப்பில் கடத்தி முதல் சீசனில் அவரின் பார்வையிலேயே நமக்கும் புலேராவைச் சுற்றிக்காட்டுகிறார் ஜிதேந்திர குமார். இரண்டாம் சீசனில் மெல்ல மெல்லக் கிராமத்து வாசிகளுடனும், பஞ்சாயத்துத் தலைவரின் குடும்பத்துடனும் நெருக்கமாகும் தருணத்தில் ‘சச்சீவ் ஜி’ என்றே நமக்கும் கூப்பிடத் தோன்றுகிறது. மூன்றாம் சீசனில் பஞ்சாயத்துத் தலைவரின் மகள் பிங்கியுடனான காதல், நட்பு ஆகியவற்றுக்கு நடுவே இருக்கும் உணர்வுக்குள் அவர் காட்டிய புன்னகை அந்த வெயில் மண்ணில் நம்மை நனைக்கும் சாரல். ஊர்த் தலைவராக மனைவி மஞ்சு தேவி (நீனா குப்தா) இருந்தாலும் நிழல் தலைவராக இருந்து அதனை நிர்வகிக்கிறார் பிரிஜ் பூஷன் (ரகுபீர் யாதவ்). முதல் சீசனில் சற்றே அந்நியமாக இருக்கும் இந்தப் பாத்திரங்கள் அடுத்தடுத்த சீசனில் கிராமத்தின் நடுவே நின்று வேடிக்கை பார்க்கும் உணர்வை அளிக்கும் அளவுக்கு புலேராவாசியாகவே மாறியிருக்கின்றனர்.

நிறையக் கிளைக்கதைகளைக் கொண்டு விரியும் இந்தத் தொடர் துணைக் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது. உதவியாளராக வரும் விகாஸ் (சந்தன் ராய்), துணைத் தலைவராக வரும் பிரஹலாத் (பைசல் மாலிக்) தங்களுக்கான இடங்களில் நடிப்பில் மின்னுகின்றனர். அதிலும் சாதாரண நகைச்சுவை நடிகர்கள் என்ற நம் எண்ணத்தை உடைத்து உருமாறுகிற இடத்தில் கண்களைக் குழாமாக்குகிறார் பிரஹலாத். புலேராவின் வில்லன்களான எம்.எல்.ஏவும், பூஷனும் திரையைப் பார்த்துத் திட்டும் அளவுக்கு நடிப்பால் நம் வெறுப்பைச் சம்பாதிக்கிறார்கள்.

ரகுபீர் யாதவ், நீனா குப்தா

ஒரு நான்குக்கு நான்கு அறை, அதை விட்டால் வெட்டவெளி என்றிருக்கும் குறைவான இடத்திலேயே நேர்த்தியான கேமரா கோணங்கள், வெக்கையான ஒளியுணர்வு எனக் கிராமத்தின் அழகியலைச் சிறப்பான பிரேம்களால் ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அமிதாப்பா சிங். கதையின் ஏற்ற இறக்கங்களைப் பின்னணி இசையால் கட்டுக்குள் வைத்திருக்கிறார் அனுராக் சாக்கியா. குறிப்பாக டைட்டில் கார்டின் இசை வருகிற காட்சியெல்லாம் மனதில் பட்டாம்பூச்சியைப் பறக்கவிடுகிறது. ஆனால் அதே இசையை வேறுவிதத்தில் மூன்றாம் சீசனின் இறுதி சண்டைக் காட்சிக்குப் பயன்படுத்தி முடித்த விதத்தில் டிராகனைப் பறக்கவிட்டிருக்கிறார்.

பஞ்சாயத்து அலுவலகத்தின் சாவி தொலைவது, பூத மரம் மூடநம்பிக்கை, மக்கள் தொகை குறைப்பு வாசகம், சுரைக்காய் எனச் சின்ன சின்ன சம்பவங்களைச் சுவாரஸ்யமாக நகைச்சுவையோடு சொன்ன விதம் கதையோடு ஒன்றச் செய்கிறது. அதிலும் ஒவ்வொரு எபிஸோடிலும் முரண்பாடுகளைச் சொல்லிவிட்டு டைட்டில் தீம் மியூசிக் வருவது அடுத்தடுத்த காட்சிகளுக்கான மூடினைச் சிறப்பாக செட் செய்கிறது. ‘குறைந்த கதாபாத்திரங்கள், நிறையக் கதைகள்’ என்பதை அடிநாதமாக வைத்து நட்பு, உறவுகளுக்கு நடுவே இருக்கும் சிக்கல் எனப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை வடமாநிலத்தின் ஒரு கிராமத்துக்கே சென்று வந்த உணர்வைத் தருகின்றன.

ஜிதேந்திர குமார்

பாலிவுட் என்றாலே தேசபக்தி, மேட்டுக்குடி மக்களின் கதைகள் என்ற விதிகளைக் கடந்து, இந்திய மண்ணின் முதுகெலும்பாக இருக்கும் கிராமத்துக்குள் கேமராக்களை நகர்த்தி வெள்ளந்தி மனிதர்களின் கதைகளை படுசுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கும் இயக்குநர் தீபக் குமார் மிஸ்ராவுக்குப் பாராட்டுக்கள். புலேராவுக்குள் நுழைகிற கரடுமுரடான சாலையினைப் போல மூட நம்பிக்கைகள், வரதட்சணை, அறியாமை, மதுபோதை, பெண்ணடிமைத்தனம் என்று பிரச்னைகள் பள்ளங்களாக இருந்தாலும், அதைப் பிரசார நெடியில்லாமல் திருத்தமான திரைமொழியில் கடத்த உதவியிருக்கிறது சந்தன் ராயின் எழுத்து.

வட இந்தியாவில் பெயருக்குப் பின்னால் சாதி இருப்பது இயல்பாக இருந்தாலும், ஒரு நேர்மறையான கதாபாத்திரம் எதிரே இருப்பவரின் சாதியை அறிந்து கொள்ள முழு பெயரைக் கேட்பது உறுத்தல். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கிராமங்கள் நகரத்தை விடப் பல ஆண்டுகள் பின்தங்கி இருக்கின்றன என்று வர்க்க ரீதியாக இதுதான் ‘ரியல் இந்தியன்’ கிராமம் என்று சொன்ன விதத்தில் சுபாஷ் வாங்கும் படக்குழு, கிராமங்களில் வியாதி போலப் பரவியிருக்கும் சாதியத்தைக் கண்டுகொள்ளவே இல்லை என்பது குறையாகவே தெரிகிறது. அதேபோல வில்லனாக வரும் சட்டமன்ற உறுப்பினர் கதாபாத்திரத்தின் செயற்கைத்தனத்தின் டோஸேஜ் கொஞ்சம் தூக்கலாகிப் போனது மைனஸ்!

ஜிதேந்திர குமார்

பீல் குட் பிரியராக நீங்கள் இருந்தால் சிரிப்பு, அழுகை, கோவம் என கம்பிளிட் பேக்கேஜ் அனுபவத்தை இந்த `பஞ்சாயத்’ உங்களுக்கு நிச்சயம் தரும். சீசன் 3-யின் முடிவு ரகளையாக முடிந்த நிலையில் “நன்றி புலேராவுக்கு மீண்டும் வருக” என்று நான்காவது சீசனுக்காகக் காத்திருக்க வைத்திருக்கிறது இந்த `பஞ்சாயத்’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.