வட மாகாணத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள்…

வட மாகாணத்தில் காணப்படுகின்ற வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று வட மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் அம்மையார் தெரிவித்தார்.

வட மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…

வட மாகாணத்தில் காணப்படுகின்ற வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு வட மாகாண சபையில் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு நியமிக்கும் அதிகாரத்தை அமைச்சரவை ஆளுநர்களுக்கு வழங்கியுள்ளது. எனவே அந்த தேவையினை நாம் அடையாளம் கண்டு, அதற்கான முறையான அதிகாரத்தை திறைசேறியிடமிருந்து பெற்றதன் பின்னர் அதற்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அடுத்த கட்டமாக வட மாகாணத்தில் காணப்படும் வேலையற்ற இளைஞர் யுவதிகளின் பாரிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அதிமேதகு ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் மூன்று விசேட பொருளாதார மையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

காங்கேசந்துறை, கிளிநொச்சி, மாங்குளம் ஆகிய பகுதிகளில் விசேட பொருளாதார மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதனூடாக வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு நவீன தொழிநுட்பங்களுடனான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும். எனவே, இளைஞர் யுவதிகள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான தொழிநுட்பக் கல்வியையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.