இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

கொழும்பு,

இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.

அனைத்துக் கட்சி ஆதரவுடன் அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 17-ம் தேதியில் இருந்து அக்டோபர் 16-ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அதிபர் தேர்தல் நடைபெறும் தேதியை இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15 முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோல, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.