சூர்யகுமார், கம்பீர் இருவரும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா? பாலிடிக்ஸ் மேட்டர்..!

Suryakumar yadav Latest News : இந்தியா கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப் பயணம் செய்திருக்கும் நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பல்லேகெலே மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை சோனி லைவ், சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரலை செய்ய இருக்கின்றன. டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிறகு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை சுப்மன் கில் தலைமையில் கைப்பற்றிய இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் தலைமையில் களம் காண இருக்கிறது. அவரை முழுநேர டி20 கேப்டனாக பிசிசிஐ அண்மையில் நியமித்தது. கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இப்போட்டியில் இருந்து செயல்பட இருக்கிறார். இந்த சூழலில் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யாரெல்லாம் இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

சஞ்சு சாம்சன் vs ரிஷப் பந்த்

சூர்யகுமார் யாதவ் தலைமயிலான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. டி20 உலகக்கோப்பை போட்டியின்போதே இந்த பிரச்சனை இருந்த நிலையில், கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, ரிஷப் பந்துக்கே வாய்ப்பு கொடுத்தார். ஆனால் இம்முறை சூர்யகுமார் கேப்டனாக இருப்பதால் இருவரில் யார் தேர்வு செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், கேப்டன் சூர்யகுமார் எடுக்கப்போகும் முடிவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 

கிரிக்கெட் பாலிட்டிக்ஸ்

சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக கிரிக்கெட் பாலிடிக்ஸில் பாதிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு இந்திய டி20 உள்ளிட்ட எந்த அணியிலும் நிரந்தரம் இடம் கொடுக்கப்படுவதில்லை. அவர் நன்றாக ஆடியபோதும் ஏன் இந்திய அணிக்குள் நீடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கான பதில் இன்றுவரை பலருக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது. இத்தனைக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்து ஆடிய சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி சதமடித்திருந்தார். ஆனால் இலங்கை தொடருக்கான ஒருநாள் போட்டியில் இடம் கொடுக்கப்படவில்லை. இதனால் பலரும் பிசிசிஐ மீது அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியிலாவது நிரந்தர இடம் அவருக்கு கொடுக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுவரை இந்தியா – இலங்கை

இந்தியா – இலங்கை அணிகள் இதுவரை 19 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் இந்திய அணி 19 முறை வெற்றி பெற்றிருக்கிறது. இலங்கை அணி ஒன்பது முறை வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு ஆட்டம் மட்டும் மழையால் நடைபெற வில்லை. அடுத்த டி20 உலகக்கோப்பையை நோக்கி புதிய பயணத்தை சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தொடங்க இருப்பதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியை எதிர்பார்த்திருக்கின்றனர். 

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் ; சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்/கலீல் அகமது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.