பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்த இந்திய முன்னாள் வீரரா..? வெளியான தகவல்

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இணைந்தது. அனில் கும்ப்ளேவுக்கு பின் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் பயிற்சியாளர் பேலிஸ் நியமனம் செய்யப்பட்டார். இவரின் பயிற்சியிலும் பஞ்சாப் அணியால் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இதனால் பேலிஸ் உடனான ஒப்பந்தம் இதுவரை புதுப்பிக்கப்படாமல் உள்ளது (கடந்த ஆண்டுடன் முடிவடைந்தது).

மேலும் பஞ்சாப் அணி நிர்வாகம் தரப்பில் இந்திய பயிற்சியாளர் ஒருவரை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.அந்த வகையில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான வாசிம் ஜாபரை நியமிக்க அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக 2019-ம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை பேட்டிங் பயிற்சியாளராகவும் அவர் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.