Niti Aayog: மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம்… கலந்துகொள்ளாமல் புறக்கணித்த நிதிஷ் குமார்!

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் காலை தொடங்கியது. இதில், ஏற்கெனவே அறிவித்தது போல எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர்.

நிதி அயோக் – Niti Aayog

மேலும், பா.ஜ.க அரசின் பாரபட்சமான பட்ஜெட்டை எதிர்த்துக் குரல்கொடுக்கப்போவதாக இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர், தான் பேசும்போது மைக்கை அணைத்துவிட்டதாக பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சியமைப்பதற்கு முக்கிய பங்கு வகித்த இரு கட்சிகளில் ஒன்றின் தலைவரும், பட்ஜெட் சிறப்பு நிதி பெற்ற பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமாரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

இவருக்குப் பதிலாக, பீகார் துணை முதல்வர்களான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ​​ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், நிதிஷ் குமார் பங்கேற்காதது குறித்து ஊடகத்திடம் பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், “நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ளாதது இது முதன்முறையொன்றும் அல்ல. இதற்கு முன்பும் முதல்வர் கலந்து கொள்ளவில்லை.

நிதிஷ் குமார்

அப்போது பீகார் பிரதிநிதியாக அப்போதைய துணை முதல்வர் கலந்துகொண்டனர். இப்போதும், பீகாரின் பிரதிநிதியாக இன்றைய துணை முதல்வர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், பீகாரைச் சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். எனவே, இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.