பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: முதல் தங்கத்தை வென்றது சீனா

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ‘ஒலிம்பிக்’போட்டி பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் 2-வது நாளான இன்று மொத்தம் 14 தங்கப்பதக்கங்களுக்கு போட்டிகள் நடக்கின்றன.

இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது முதல் தங்கப்பதக்கத்தை சீனா வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் சீனாவின் ஹுவாங் யுடிங், ஷெங் லிஹாவ் ஜோடி, கொரியா அணியை வீழ்த்தி தங்கத்தை வென்றது.

இதன்படி சீனாவுக்கும், கொரியாவுக்கும் இடையே நடந்த இறுதிச் சுற்றில் கடும் போட்டி நிலவியது. முடிவில் சீன ஜோடி 16-12 என்ற செட் கணக்கில் கொரியாவின் கியூம் ஜிஹ்-யோன்-பார்க் ஹா-ஜூனை தோற்கடித்தது. முன்னதாக நடந்த தகுதிச் சுற்றில் சீனாவும், கொரியாவும் முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்தன. இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் நாடாக சீனா ஆனது.

இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கொரியா அணி வெள்ளிப்பதக்கத்தையும், மூன்றாம் இடம் பிடித்த கஜகஸ்தான் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இதன்படி பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது முதல் பதக்கத்தை கஜகஸ்தான் வென்றது. 1996க்குப் பிறகு துப்பாக்கிச் சுடுவதில் கஜகஸ்தான் வென்ற முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும்.

முன்னதாக இந்திய தரப்பில் ரமிதா-அர்ஜூன் பாபுதா மற்றும் இளவேனில்-சந்தீப்சிங் ஆகிய ஜோடிகள் களம் இறங்கின.இந்த தகுதி சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பதக்கங்களுக்கான போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இந்தியாவின் ரமிதா-அர்ஜூன் பாபுதா இணை 6-வது இடத்தையும், இளவேனில்-சந்தீப்சிங் ஜோடி 12-வது இடத்தையும் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.