டெல்லி: 3 பேர் உயிரிழந்த விவகாரம்: ஐ.ஏ.எஸ் பயிற்சி மைய உரிமையாளர் கைது

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்துவந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 2 மாணவிகளும் ஒரு மாணவரும் உயிரிழந்தனர்.

இதனால் கொந்தளிப்பில் நேற்று நள்ளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னாள் கூடி மாணவர்கள் மாநகராட்சியைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்பை சரி செய்யாததே கட்டடத்துக்குள் நீர் புகுந்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, பயிற்சி மையத்தில் பயின்று வந்த மூன்று பேர் பலியானது தொடர்பாக ஐ.ஏ.எஸ் பயிற்சி மைய உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள வேறு ஏதேனும் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களில் தரைதளம் இருந்தாலும் அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்றும் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.