2023-2027 ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் உட்பட உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட தேசிய தொழில்துறை தளத்தை உருவாக்குவதற்கான தேசிய தொழில்துறை கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது

• 2030 ஆம் ஆண்டுக்குள். 

மொத்தத் தேசிய உற்பத்திக்கு தொழில்துறையின் பங்களிப்பை 20% ஆக உயர்த்துதல்.

தொழிற்படைக்கு தொழில்முயற்சியாளர் பங்களிப்பை 7% ஆக அதிகரித்தல்.

தொழில்துறை ஏற்றுமதியின் பங்களிப்பை மொத்தத் தேசிய உற்பத்தியில் 20% ஆக அதிகரிப்பதே நோக்கமாகும்.

• ஜூன் 2024 வரை 3,925 உற்பத்தித் தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

• 2023-2024 ஆம் ஆண்டில் ரொக் பொஸ்பேட் விற்பனை மூலம் 1080 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

• இரத்தினக்கற்கள், ஆபரணங்கள் மற்றும் வைரத் தொழிற்துறை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் மூலம் 2023 ஆம் ஆண்டில் 478 மில்லியன் அமெரிக்க டொலர்கள், 2024 ஜூன் மாதம் வரை 194 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் – கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க.

உலகளாவிய போட்டித்தன்மைகொண்ட தேசிய அடிப்படையை இந்நாட்டில் உருவாக்கும் வகையில் 2023-2027 காலப்பகுதிக்கான ஐந்தாண்டு மூலோபாய திட்டத்துடன் கூடிய “தேசிய கைத்தொழில் கொள்கை” தயாரிக்கப்பட்டு, தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்தார்.

இதன் மூலம், 2030 ஆம் ஆண்டளவில், மொத்த தேசிய உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 16% லிருந்து 20% ஆக உயர்த்துதல், தொழிற்படைக்கு தொழில்முயற்சியாளர் பங்களிப்பை 2.8% லிருந்து 7% ஆக உயர்த்துதல், மொத்த தேசிய உற்பத்தியில் தொழில்துறை ஏற்றுமதியின் பங்களிப்பை 14% இல் இருந்து 20% ஆக உயர்த்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

”இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

தற்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்றவாறு கைத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தினை திருத்துவதற்கான இறுதி வரைபு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க,

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கைத்தொழில் அமைச்சு விசேட பங்காற்றியது. அதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள், மொத்த தேசிய உற்பத்தியில் தொழிற் துறையின் பங்களிப்பை 16% இலிருந்து 20% ஆக உயர்த்துவதும், தொழில்முயற்சியாளர் பங்களிப்பை 2.8% இலிருந்து 7% ஆக அதிகரிப்பதுமே எமது இலக்காகும்.

2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த தேசிய உற்பத்தியில் தொழில்துறை ஏற்றுமதியின் பங்களிப்பை 14% இலிருந்து 20% ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இலக்குகளை அடைவதற்காக, உலகளாவிய போட்டித் தேசிய தொழில்துறை தளத்தை இந்நாட்டில் உருவாக்கும் நோக்கத்துடன், 2023-2027 காலப்பகுதிக்கான ஐந்தாண்டு மூலோபாய திட்டத்துடன் தேசிய கைத்தொழில் கொள்கை தயாரிக்கப்பட்டு தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்றவாறு கைத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத் திருத்த இறுதிச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் தொழில்துறைகளுக்கு ஏற்ற சூழலை அமைக்கும் வகையில், உள்நாட்டில் வாகன ஒன்றிணைப்பிற்கான அனைத்து வழிகாட்டுதல்கள், ஒழுங்குமுறை நடைமுறைகள் மற்றும் ‘உள்நாட்டு மதிப்பு கூட்டல் கோட்பாடு’ உள்ளடங்கப்படும் நிலையான இயக்க முறை (SOP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் செயல்பாட்டிற்குப் பிறகு, நாட்டில் எழுபத்தாறு புதிய வாகன மாதிரிகள் மற்றும் இருபத்தி ஒன்பது மோட்டார் வாகன ஒன்றிணைப்பு நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதையும் கூற வேண்டும்.

இதேவேளை, கைத்தொழில் அமைச்சின் கீழ் உற்பத்தி கைத்தொழில்களின் பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், 2024 ஜூன் வரை 3,925 உற்பத்தி கைத்தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, இணையம் மூலம் தொழில்களை பதிவு செய்வதும்

எளிதாக்கப்பட்டுள்ளது. இதனால் உலகின் எந்த நாட்டிலிருந்தும் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், நுண், சிறு மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்கு வசதிகளை வழங்கும் நோக்கில், சிறிய மற்றும் சிறு கைத்தொழில்களில் தலைமைத்துவம் மற்றும் தொழில் முனைவோரை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சுழற்சிமுறை நிதிக் கடன் திட்டத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டிற்கு 33 திட்டங்களுக்கு 293.4 மில்லியன் ரூபாவும், 2023 ஆம் ஆண்டிற்காக 176 திட்டங்களுக்காக 1753 மில்லியன் ரூபா கடன்கள், 10 பங்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் (வங்கிகள்) மூலம் வழங்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில் இதுவரை 179 திட்டங்களுக்காக 1647 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சூழல்நேய திட்டத்தின் கீழ், சுழற்சி முறை நிதிக் கடன் திட்டத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டில் 33 திட்டங்களுக்கு 293.4 மில்லியன் ரூபாவும், 2023 ஆம் ஆண்டிற்கான 11 பங்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் (வங்கிகள்) மூலம் 07 திட்டங்களுக்கு 155 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் இதுவரை 15 திட்டங்களுக்காக வழங்கப்பட்ட கடன் தொகை 256 மில்லியன் ரூபாவாகும்.

அரச நிறுவன மறுசீரமைப்பின் கீழ் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை 2022 முதல் 2024 ஏப்ரல் வரை 3899.37 மெட்ரிக் தொன் காகிதத்தை உற்பத்தி செய்துள்ளது.

மேலும், அரச-தனியார் பங்காளித்துவத்தின் கீழ் KSPA Embilipitiya Paper Mills (pvt) Ltd தனியார் நிறுவனத்துடன் இணைந்து எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையின் உற்பத்திச் செயற்பாடுகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

மேலும், கனிம வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை மினரல் சாண்ட்ஸ் நிறுவனம், கனிம மணலை விற்பனை செய்வதற்கு புதிய விற்பனை முறையைப் பயன்படுத்தி, 2023 இல் முதல் விற்பனையை மேற்கொண்டது. இதன் மூலம் 62,150 மெட்ரிக் தொன் கணிய மணலுக்கு 20.33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது. சிர்கான் கொன்ஸன்டிரேட் 30,000 மெட்ரிக் தொன்களுக்காக 14.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது.

மேலும், இலங்கை போஸ்பேட் நிறுவனம் 2023-2024 ஆம் ஆண்டில் சுமார் 50,000 மெற்றிக் தொன்கள், ரொக் போஸ்பேட் உற்பத்தி செய்து அவற்றை விற்பனை செய்து 1080 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

மேலும், இரத்தினக்கற்கள், ஆபரணங்கள் மற்றும் வைர பொருட்கள் ஏற்றுமதி மூலம் 2023 ஆம் ஆண்டு 478 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதுடன், 2024 ஜூன்

மாத இறுதிக்குள் 194 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதி வருமானத்தை தேசிய பொருளாதாரத்திற்கு வழங்க முடிந்துள்ளது.

இந்த வருமான நிலையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இரத்தினபுரி தெமுவாவத்தையில் 450 மில்லியன் ரூபா செலவில் சர்வதேச இரத்தினக்கல் ஏற்றுமதி நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இரத்தினக்கற்கள் வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்காக 27 வர்த்தக நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதில் முழுமையான இரத்தின ஆய்வு கூடமும் உள்ளது.

மேலும், கரந்தெணியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கறுவா தொடர்பான கைத்தொழில் பேட்டையில் கறுவா மைய செயலாக்க நிலையத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 100 கறுவா உற்பத்தியாளர்கள் மற்றும் வழங்குநர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும், பெறுமதி சேர்க்கும் வாய்ப்புகளை வழங்குவதற்கும், சர்வதேச உயர் சந்தைக்கு அவர்களின் உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபை 83 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனை நிலையங்களை உள்ளடக்கிய ஒரு சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.

மேலும், உற்பத்தித் தொழில்துறையை ஊக்குவிப்பதன் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 ஆம் திகதி தேசிய தொழில்துறைத் தினமாக அறிவிக்கப்பட்டு, அதற்கு இணையாக, 2023 முதல் ஆண்டுதோறும் தேசிய தொழில் கண்காட்சி நடத்தப்படும். ஜூன் 2024 இல் நடைபெற்ற சர்வதேச தொழில்துறை கண்காட்சியில் 1000 இற்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் மத்தியதர அளவிலான தொழில்துறை உரிமையாளர்களுக்கு விசேட வாய்ப்புகளை வழங்கும், Profood Propack சர்வதேச வர்த்தக கண்காட்சி 2023 இல் 300 அரங்குகள் மற்றும் 25000 பார்வையாளர்களைக் கொண்ட 50 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்துறை கண்காட்சியாளர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.அடுத்த கண்காட்சியை ஆகஸ்ட் 2024 இல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கைவினைத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு “ஷில்ப அபிமானி” ஜனாதிபதி விருதுகள் கைவினைப் போட்டி, கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழாவில் 508 கைவினைக் கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், நுண் தொழில்முனைவோருக்கு புதிய தொழில்களை ஆரம்பிக்க அல்லது வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையானது “Made in Sri Lanka” வர்த்தக கண்காட்சி திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 125 வர்த்தக கண்காட்சிகளை நடத்தி 3,439 தொழில்முனைவோருக்கு விற்பனை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் வைத்தியர் சாரங்க அழகப்பெரும, இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விராஜ் கஜேந்திர டி சில்வா, மேலதிக செயலாளர் (தொழில்துறை மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி) எஸ்.ஏ.எம்.எல். குணதிலக, மேலதிகச் செயலாளர் (துறை அபிவிருத்தி) ஐ.சி.பதிராஜ, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் கே. ஏ.எல்.பி. காரியப்பெரும, இலங்கை கைவினைப் பொருட்கள் சபையின் (லக்சல) தலைவர் ருஷான் மாரம்பகே, கம்பனிகள் பதிவாளர் திணைக்களதின் கம்பனிகள் பதிவாளர் எல்.கே.எஸ். தர்மகீர்த்தி, தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் சம்பத் அரஹெபொல, தேசிய கடதாசி நிறுவனத்தின் தலைவர் விமல் ரூபசிங்க உட்பட கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் பலர் இந்த ஊடக மாநாட்டில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.