ஐ.பி.எல்.2025: அந்த வீரர்களை தடை செய்ய வேண்டும் – ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆதங்கம்

மும்பை,

அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

இதில் அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. அப்போது பெரும்பாலான அணிகள் 4க்கு பதிலாக 7 வீரர்களை தக்க வைக்க கோரிக்கை வைத்தன. அத்துடன் பெரும்பாலான அணிகள் மெகா ஏலத்திற்கு பதிலாக சிறிய ஏலம் நடத்துவதை விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஏலத்தில் வாங்கப்படும் வீரர்கள் கடைசி நேரத்தில் காயத்தை தவிர்த்து சொந்த காரணத்திற்காக வெளியேறினால் அவர்களை தடை செய்ய வேண்டும் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக கடந்த சீசனில் பெரிய தொகைக்கு விலை போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை வீரர் ஹசரங்கா 1.5 கோடிக்கு ஐதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்டதால் அவர் ஐதராபாத் அணிக்காக விளையாடவில்லை. எனவே அது போன்ற வீரர்களை தடை செய்ய வேண்டும் என்று ஆதங்கம் தெரிவிக்கும் காவ்யா மாறன் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

“ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட ஒரு வீரர் காயத்தை தவிர்த்து வேறு எந்த காரணத்திற்காக விளையாட வராமல் போனாலும் அவரை தடை செய்ய வேண்டும். ஏனெனில் அணி நிர்வாகங்கள் தங்களுடைய சேர்க்கையை உருவாக்குவதற்காக ஏலத்தில் நிறைய முயற்சிகளை போடுகின்றன. ஆனால் கடைசியில் குறைந்த தொகைக்காக வாங்கப்பட்டதற்காக சில வீரர்கள் வராமல் போவது அணியின் சமநிலையை பாதிக்கிறது. அப்படி இந்த சீசனில் நிறைய வெளிநாட்டு வீரர்கள் வரவில்லை” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.